குழந்தையை யார் வளர்க்க போறீங்க? சட்டுனு கேட்ட நீதிபதி! ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில்! ஓகே சொன்ன சைந்தவி
சென்னை: சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்த விவாகரத்து வழக்கில் ஆஜரான ஜி.வி.பிரகாஷ், தனது குழந்தையை சைந்தவியே பராமரிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துள்ளார். பொதுவாக இது போன்ற விவாகரத்து வழக்குகளில் பெண் குழந்தைகள் தாயிடம் வளரவே கோர்ட் அனுமதிக்கும். அதை மீறி குழந்தையின் விருப்பமும் கருத்தில் கொள்ளப்படும்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசைத் துறையில் மட்டுமில்லாமல் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தனது இசையால் பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்து வரும் ஜி.வி.பிரகாஷ், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் பாடகியும் தனது தோழியுமான சைந்தவியை 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி நிறைய பாடல்களை பாடியுள்ளார். அதற்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இணைந்து வாழ்ந்த இருவரும் திடீரென பிரிவதாக கடந்த ஆண்டு சமூகவலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
சினிமா பிரபலங்கள் தனுஷ்- ஐஸ்வர்யா, ஏ.ஆர்.ரகுமான்- சாய்ரா, ரவி மோகன்- ஆர்த்தி என தொடர்ந்து விவாகரத்து அறிவிப்புகளால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஜிவி பிரகாஷ்- சைந்தவி ஜோடியின் விவாகரத்து அறிவிப்பால் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதையடுத்து 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து தொடர்பாக இருவரும் பரஸ்பரம் முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கியிருந்தது. இந்த 6 மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில் நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி செல்வ சுந்தரி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜி.வி. பிரகாஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெம்லெஸ் காந்தியும் சைந்தவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயனும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து சைந்தவி, ஜிவி.பிரகாஷ் ஆகிய இருவர் தரப்பிலும் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை, பிரிந்து வாழ்வதையே விரும்புவதாக நீதிபதியிடம் தெரிவித்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "உங்களது பெண் குழந்தையை யார் பார்த்துக் கொள்ள போகிறீர்கள்" என கேள்வி எழுப்பினார். குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விவாகரத்து கோரிய மனு மீது செப்டம்பர் 30ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications