"தமிழக அரசு அடிபணிந்தது. இந்து சக்தி வென்று தீரும்.. இது சத்தியம்" - எச்.ராஜா ஆவேசம்!
சென்னை: தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேச விஷயத்தில் தமிழக அரசு அடிபணிந்தது. ஒன்றுபட்ட இந்து சக்தி வென்று தீரும். இது சத்தியம் என பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் சுமந்து செல்லும் பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தாண்டு தடை விதிக்கப்பட்டது.
கேரளாவில் பரவும் புதிய காய்ச்சல்... 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்குகிறது... பெற்றோர்களே உஷார்!
இதற்கு இந்து அமைப்பினர், மடாதிபதிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார். இதைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசு அடிபணிந்தது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பட்டினப் பிரவேசம்
தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்று வரும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் குரு மகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார்.
தருமபுர ஆதீன பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்ததற்கு, பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள், இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
முதல்வருடன் சந்திப்பு
இந்நிலையில், கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், விழுப்புரம் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் நேற்று இரவு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.
வழக்கம்போல் நடைபெறும்
முதல்வர் உடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆதீனங்கள், "தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சி சுமுகமாக நடைபெற வேண்டுகோள் விடுத்தோம். இந்த ஆண்டு மரபுப் படி எல்லா நிகழ்வுகளும் நடைபெற வேண்டுகோள் விடுத்துள்ளோம். வழக்கம் போல் நடைபெற ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி வழக்கம் போல் சிறப்பாக நடைபெறும்." எனத் தெரிவித்தனர்.
தடை நீக்கம்
இந்நிலையில் இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், "பட்டினப்பிரவேசம் விழாவை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் அனுமதி அளித்திருக்கிறார். அவருக்கு நமது நல் ஆசிகள். இந்த விழாவை எப்படியும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தோம். அதற்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மிகவும் முயன்றிருந்தார். அவருக்கும், அறநிலையத்துறை ஆணையர், செயலர் ஆகியோருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
தோளில் சுமப்பதை மனிதாபிமானம் அற்றது என்று சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் விருப்பப்பட்டுத்தான் தொண்டர்கள் சுமக்கின்றனர் என்று நாங்கள் கூறுகிறோம். இறைவன் கொடுத்த தவத்தினால் கிடைக்கிறது இந்த பல்லக்கு. இதனை சுமப்பதை தொண்டர்கள் எளிதானதாகவே நினைக்கின்றனர்" என்றார்.
அடிபணிந்த அரசு?
இந்நிலையில், பட்டினப்பிரவேசத்திற்கு அரசு அனுமதி அளித்திருப்பது குறித்து பா.ஜ.க முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "அடி மேல் அடி. அயோத்யா மண்டபம் விஷயத்தில் அறநிலையத்துறைக்கு அடி. தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேச விஷயத்தில் தமிழக அரசு அடிபணிந்தது. ஒன்றுபட்ட இந்து சக்தி வென்று தீரும். இது சத்தியம்" எனத் தெரிவித்துள்ளார்.
அயோத்தியா மண்டப சர்ச்சை
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்திற்கு தக்கார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அறநிலையத்துறைக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதேநேரம், ஸ்ரீராம் சமாஜத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து புதிதாக விசாரணை நடத்தலாம் என இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிடப்பட்டது.
இந்த நிகழ்வை தி.மு.க அரசின் அறநிலையத்துறைக்கு அடி எனக் குறிப்பிட்டே எச்.ராஜா இவ்வாறு ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.