H.Raja: ப.சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது! எச்.ராஜா கடும் விமர்சனம்
காரைக்குடி: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு பொருளாதாரமே தெரியாது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா, காரைக்குடி மகரிஷி மெட்ரிகுலேஷன் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். அதன் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் மீது கடும் தாக்குதல்களை தொடுத்தார்.

தேர்தல் வாக்குப்பதிவு குறித்து
இந்த தேர்தலில் இறந்துபோன வாக்காளர்கள் மற்றும் தவறாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் தேர்தல் கமிஷனின் சிறப்பு சுருக்க திருத்தம் (SIR - Special Intensive Revision) மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று எச். ராஜா தெரிவித்தார்.
"இதன் விளைவாக, இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக உயரும். மக்கள் தங்கள் உண்மையான குரலை வெளிப்படுத்துவார்கள்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மாற்றத்திற்கு மக்கள் வாக்களிப்பார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் முழுமையான ஊழல் ஆட்சி நடைபெற்றதாக எச். ராஜா குற்றம்சாட்டினார். "மக்கள் இந்த ஊழல் ஆட்சியை பார்த்து வெறுத்திருக்கிறார்கள். இம்முறை ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர மனதளவில் தயாராகி வாக்களிக்க வருகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் மத்திய அரசின் கடன் கொள்கை குறித்து விமர்சனம் தொடுத்ததற்கு எதிர்வினையாற்றிய எச். ராஜா கூறியதாவது: "சிதம்பரத்திற்கு அடிப்படை பொருளாதார அறிவே இல்லை. இந்தியா கடன் வாங்குகிறது என்றால் அது முதலீட்டிற்காக வாங்கும் கடன். உள்கட்டமைப்பு வளர்ச்சி, தொழில் முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்று நாட்டின் எதிர்காலத்திற்காக வாங்கப்படும் கடனை, நுகர்வு செலவிற்கு வாங்கும் கடனோடு ஒப்பிட முடியாது."
"சிதம்பரம் ஒரு பொருளாதார நிபுணர் அல்ல. அவர் ஒரு வழக்கறிஞர். பொருளாதாரத்தில் அவருக்கு எந்த பட்டமும் இல்லை. ஆனால் பொருளாதாரம் பேசுவது போல் நடிக்கிறார்" என்று எச். ராஜா நேரடியாக சாடினார்.
"2014 வரை சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது இந்தியா எங்கிருந்தது என்று மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பிய அவர், "அப்போது இந்தியா உலகின் 'நொறுங்கும் பொருளாதார நாடுகளில்' (Fragile Five) ஒன்றாக பட்டியலிடப்பட்டிருந்தது. நாணயம் வீழ்ச்சி, பணவீக்கம், வளர்ச்சி தேக்கம் என்று அவலமாக இருந்தது" என்று குறிப்பிட்டார்.
"ஆனால் இன்று மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ் இந்தியா, உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சாதனை" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
"இதையெல்லாம் அறிந்தும் சிதம்பரம் எந்த வெட்கமும் இல்லாமல் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். இது மக்களை திசைதிருப்பும் முயற்சி மட்டுமே" என்று எச். ராஜா தெரிவித்திருந்தார்.














Click it and Unblock the Notifications