கைதி நம்பர் 1440-ஐ உடனே ஜெயிலுக்கு அனுப்புங்க.. இனியும் நாடகமாடுனா ஆபத்து.. எச்.ராஜா பரபர!
சென்னை: கைதி நம்பர் 1440 உடனடியாக சிறைக்கு அனுப்பப்பட்ட வேண்டும். இன்னமும் தமிழக அரசு நாடகமாடுமானால் அது தமிழ்நாடு அரசுக்கும் காவேரி மருத்துவமனைக்கும் ஆபத்தாக முடியும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகிய இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் 3வது நீதிபதிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நேற்று தீர்ப்பளித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டும் எனத் தீர்ப்பளித்தார்.
மேலும், அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்தால், காவலில் எடுக்க வேண்டியது அவசியம். காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோருவது அவர்களின் உரிமை. ஆகவே அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது. கைது சட்டப்படியானது; நீதிமன்ற காவல் சட்டப்படியானது. ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல எனத் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது என 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் உறுதி செய்தார். அமலாக்கத்துறை சட்டப்படி தான் கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. இனிமேலாவது திராவிடியன் ஸ்டாக் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். கைதி நம்பர் 1440 உடனடியாக சிறைக்கு அனுப்பப்பட்ட வேண்டும்.
இன்னமும் தமிழக அரசு நாடகமாடுமானால் அது தமிழ்நாடு அரசுக்கும் காவேரி மருத்துவமனைக்கும் ஆபத்தாக முடியும். கைதி நம்பர் 1440 காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் ஒரு மருத்துவமனையை அது புதிதாக வாங்கியுள்ளதாம். அதன் பெயர் என்ன? தெரிந்தவர்கள் கூறவும். 40 நாட்களாக ஒரு குற்றவாளியை காப்பாற்ற முயற்சி செய்து தமிழ்நாடு அரசு தோல்வியடைந்துள்ளது. தமிழகத்திற்கு தலைகுனிவு இன்று" என விமர்சித்துள்ளார்.
முன்னதாக, எச்.ராஜா பதிவிட்ட ட்வீட்டில், திமுகவின் ஆட்டம் இன்னுமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவமனையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா? எனக் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications