Dress Code: நீங்க சொல்லியிருந்தா நானும் அந்த கலர்ல ட்ரெஸ் போட்டுட்டு வந்திருப்பேனே! சத்யராஜ் கலகல
சென்னை: "நீங்க சொல்லியிருந்தா நானும் அந்த கலர்ல ட்ரெஸ் போட்டுட்டு வந்திருப்பேனே.." என சத்யராஜ் கலகலப்பாக தெரிவித்தார். விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் மகன் சிபி சத்யராஜ், வெள்ளை நிற சட்டை, காக்கி நிற பேண்ட் அணிந்து வந்தது குறித்து கேட்டதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இது மாலை 6 மணிக்கு முடிகிறது. தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அது போல் தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள்: 5,73,43,292
இதுவரை வாக்களித்தவர்கள்: 2,15,38,140
மீதம் உள்ளோர்: 3,58,05,152.

அவிநாசி 43.97 சதவீதம், அரக்கோணம் 39.90 சதவீதம், ஆலந்தூரில் 40.52 சதவீதம், அரவக்குறிச்சி 40.76 சதவீதம் வாக்குகள் அதிகபட்சமாக பதிவாகியுள்ளன.
காலை முதல் ஆளாக நடிகர் அஜித், திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அது போல் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தவெக தலைவர் விஜய், நடிகர்கள் ரஜினி, சத்யராஜ், சிபி சத்யராஜ், கார்த்திக், கவுதம் கார்த்திக், சிவகுமார், சரத்குமார் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
அதுபோல் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகைகள் திரிஷா, ராதிகா, குஷ்பு உள்ளிட்டோர் வாக்களித்தனர். திமுக ஆதரவாளரான சத்யராஜ் வாக்களிக்க வந்த போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நான் எனது ஜனநாயக கடமையை செய்துவிட்டேன். அது போல் எல்லாரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். அதற்கு மேல் எதுவும் சொல்லக் கூடாது, ரகசிய வாக்கெடுப்புதானே இது! ஆனால் ரகசியம் இல்லை, எல்லாருக்குமே தெரியும். அதுதான்.
நான் எதையும் பேசக் கூடாது என நினைக்கிறேன், ஆனால் நீங்கள் என் வாயை புடுங்குகிறீர்கள். எனக்கு தேர்தல் விதிகள் தெரியும். நான் எதையும் சொல்ல மாட்டேன். இப்போது பிரச்சாரம் செய்யக் கூடாது, நான் பிரச்சாரம் எல்லாம் செய்து முடித்துவிட்டேன் என்றார்.
அப்போது செய்தியாளர்கள் வழக்கமாக நீங்களும் சிபி ராஜும் சேர்ந்து வாக்களிக்க வருவீர்கள். ஆனால் இப்போது தனித்தனியாக வந்துள்ளீர்களே என கேட்டனர். அதற்கு, அவர் என்னிடம் அவர் குழந்தைகளை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் அவர் வரும் வரை நான் பார்த்திருந்தேன்.
அவர் வந்ததும் குழந்தைகளை அவரிடம் விட்டுவிட்டு நான் வாக்களிக்க வந்துள்ளேன் என்றார். சிபி ராஜ், விஜய் போல் உடை அணிந்துள்ளாரே என்ற செய்தியாளரின் கேள்விக்கு சத்யராஜ் கூறுகையில் "நீங்க சொல்லியிருந்தா நானும் அந்த கலர்ல ட்ரெஸ் போட்டுட்டு வந்திருப்பேனே.." என்றார்.
அதாவது வாக்களிக்க வந்த சிபி சத்யராஜ், விஜய்யை போல் வெள்ளை நிற சட்டை, காக்கி நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார். அவர் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவளித்து வருகிறார். வாக்குப் பதிவு நாளில் தவெகவினர் அனைவரும் விஜய்யை போல் ஒரே மாதிரியான ஆடை அணிவதாக முதலில் சொல்லப்பட்டது. அந்த வகையில் சிபியும் அதே நிற ஆடை அணிந்து வந்திருந்தார். சத்யராஜ் வீட்டில் அவரும் அவரது மகளும் திமுக ஆதரவாளர்கள். மகள் திவ்யா திமுகவில் ஐடி விங்கில் துணைச் செயலாளராக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications