சென்னையில் வீடு இருக்கா? விற்பனை பத்திரம் ரெடி.. தமிழக வீட்டு வசதி வாரியம் குட் நியூஸ்.. மகிழ்ச்சி
சென்னை: பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் வீட்டுவசதி வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், இப்போதும் ஒரு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. என்ன அது?
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் பல்வேறு திட்டங்களில் பொதுமக்களுக்கு மாதத்தவணை திட்டம், மொத்த கொள்முதல் திட்டம் மற்றும் சுயநிதி திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வீட்டு வசதி வாரியம்: அந்தவகையில், தமிழகத்தில் வீட்டுவசதி வாரிய திட்டங்களில், பொது மக்கள் வீடு ஒதுக்கீடு பெறுகின்றனர். இப்படி ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தொகையை தவணை முறையில் செலுத்த வேண்டும். குடியிருப்புகளுக்குரிய முழுத்தொகையும் செலுத்திய பிறகு, கிரயப்பத்திரமும் வழங்கப்பட்டுவிடும்.
ஒருவேளை, முழுத்தொகையை செலுத்தியிருந்தும் விற்பனைப் பத்திரம் பெறாதவர்கள் மற்றும் நிலுவைத் தொகை உள்ளவர்கள், அதனை செலுத்தி விரைவாக விற்பனை பத்திரம் பெறும் வகையில், செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிடவும், நிலுவைத்தொகை செலுத்த வேண்டியவர்கள், உடனடியாக தொகையை செலுத்த வேண்டும் என்றும் அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டே வருகிறது.
தவணை பணம்: எனினும், ஏதாவது காரணங்களால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் தவணை செலுத்த தவறியுள்ளனர். இப்படி தவணை தவறியவர்களுக்கு வட்டிக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால் நிலுவை தொகையும் அதிகமாகி கொண்டேபோகிறது.
அதனால்தான், வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், நிலுவை தொகையை ஒரே தவணையாக செலுத்தினால், உடனடியாக விற்பனை பத்திரம் வழங்கப்படும் என்று தமிழக வீட்டுவசதி வாரியம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. அதாவது, ஒரே தவணையாக அனைத்து நிலுவை தொகையையும் செலுத்துவோருக்கு, சில சலுகைகள் வழங்க போகிறதாம் வீட்டுவசதி வாரியம்..
சபாஷ்: அதன்படி, சென்னையில், அண்ணா நகர், கே.கே.நகர், பெசன்ட் நகர், ஜெ.ஜெ., நகர் கோட்டங்களுக்கு உட்பட்ட திட்டங்களுக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நிலுவை தொகையை ஒரே தவணையாக செலுத்துவோருக்கு உடனடியாக விற்பனை பத்திரம் வழங்கப்படும் என்றும், வீடு, மனை ஒதுக்கீட்டாளர்கள் சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களை அணுகி இச்சலுகையை பெறலாம் என்றும் வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.
எப்போதுமே நிலுவை தொகை செலுத்தியவர்கள், பத்திரங்களை பெறுவதற்கு படாதபாடு படும் நிலையில், உடனடியாக பத்திரம் கிடைப்பது ஒதுக்கீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications