EPFO மூலம் மத்திய அரசு ரூ.15000 ஊக்கத்தொகை.. முதல் முதலாக மாத சம்பளம் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்
சென்னை: இந்த ஆகஸ்ட் 1 முதல், பிரதான் மந்திரி விகாசித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PM-VBRY) என்ற புதிய வேலைவாய்ப்பு முயற்சியை மத்திய அரசு துவங்கியிருக்கிறது.. முதல் முறையாக இளைஞர்கள் பணியில் சேருவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், 2 தவணைகளில் ரூ.15,000 நிதி ஊக்கத்தொகையை வழங்குகிறது. இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரி துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் சார்பில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் நடைபெற்ற நிலையில், அதுகுறித்த விவரங்களை மத்திய துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் ஸ்ரீநுதாரா விரிவாகவே பேசியிருக்கிறார்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, வேலைவாய்ப்புடன் இணைந்து ஊக்கத்தொகை வழங்கும் வகையில், பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்..

பிரதம மந்திரி ரோஜ்கர் மேளா"
"Employment Linked Incentive (ELI) Scheme" என்ற இந்த புதிய திட்டமானது, "பிரதம மந்திரி ரோஜ்கர் மேளா" திட்டத்தின் ஒரு பகுதியாகும்.. ஆரம்ப வேலை கட்டத்தில் நிதி சுமையைக் குறைக்கவும், இளம் நிபுணர்கள் முறையான, ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் சேர ஊக்குவிக்கவும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காகவே, ரூ.99,446 கோடி பட்ஜெட்டில்ர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக EPFO-வில் பதிவுசெய்து, மாதத்திற்கு ரூ.1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். பணியாளர் EPFO-வில் சேர்ந்த பிறகு, தொடர்ந்து 6 மாதங்கள் வேலை செய்த பிறகு முதல் தவணை வழங்கப்படும்.
பெருகும் வேலைவாய்ப்புகள்
12 மாதங்கள் வேலை செய்ததுமே, ஒரு கட்டாய நிதி கல்வியறிவு படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு வழங்கப்படும்... இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.92 கோடி புதிய ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுருக்கமாக சொன்னால், வேலைவாய்ப்பு உருவாக்குதல், வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துதல் போன்றவற்றை எளிதாக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
மத்திய அரசின் அதிரடி
இந்நிலையில், இப்புதிய திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரி துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் சார்பில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் நடந்தது..
இந்த நிகழ்வில் மத்திய துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் ஸ்ரீநுதாரா, தமிழக அரசின் தொழிலாளர் கூடுதல் ஆணையர் லட்சுமிகாந்தன், ஐசிஎஃப் முதன்மை தலைமைப் பணியாளர் அதிகாரி ஆர்.மோகன்ராஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்..
பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்
பிரதான் மந்திரி விகாசித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டம் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய துணை முதன்மை தொழிலாளர் ஆணையர், "உற்பத்தி தொழில் உட்பட பல்வேறு துறைகளில் 3.5 கோடி வேலைவாய்ப்புகளை 2027 ஜூலை மாதத்துக்குள் உருவாக்குவதற்காக, ரூ.99,446 கோடி மதிப்பீட்டில், பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், வேலை வழங்கும் நிர்வாகமும், முதன்முதலாக வேலைபெறுபவர்களும் ஊக்கத்தொகை பெறுவார்கள். அதாவது, முதல்கட்டமானது, 2025 ஏப்ரல்1 முதல் 2027 ஜூலை 31 வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
15000 ஊக்கத்தொகை
அதன்படி, வருங்கால வைப்பு நிதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் பதிவு செய்து முதன்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு ரூ.15 ஆயிரம்வரை ஊக்கத்தொகை 2 தவணைகளாக வழங்கப்படுகிறது.
அதேபோல், வேலை வழங்குபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன்படி, ரூ.10 ஆயிரம் வரை ஊதியம் பெறும் ஊழியரை நியமித்தால், ரூ.1000-ம், ரூ.20 ஆயிரம் வரை ஊழியரை நியமித்தால், ரூ.2 ஆயிரம், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் ஊழியரை நியமித்தால் ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வேலை வழங்குபவருக்கு வழங்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications