சார் பதிவாளர் அலுவலகம்.. தமிழக பத்திர பதிவுத்துறை தந்த இனிப்பு நியூஸ்.. சீர்காழிக்கு ரொம்ப மகிழ்ச்சி
சென்னை: பதிவுத்துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்துவரும் நிலையில், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, 582 சார் - பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வரும்நிலையில், பெரும்பாலான அலுவலகங்களில் வருடத்துக்கு 2,000த்துக்கு மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகின்றன.

பதிவுத்துறை: இதில், சில பகுதிகளில் மட்டும் வருடத்துக்கு வெறும் 200 முதல் 500 பத்திரங்கள் தான் பதிவு செய்யப்படுகிறதாம்.. அதனால், இந்த அலுவலகங்களால், வருவாய் இலக்கை எட்ட முடியாத சூழல் ஏற்பட்டுவிடுவதாக தெரிகிறது. அதுவுமில்லாமல், வருவாய் எட்ட முடியாத சூழலில், இந்த அலுவலகங்களில் பல்வேறு நடைமுறை சிக்கல்களும் எழுவதாகவும் கூறப்படுகிறது.
அதனால்தான், குறைந்த எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களை மூடுவதற்கான பணிகளை பதிவுத்துறை துவக்கியிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு மீடியாவில் செய்திகள் கசிந்தன.
பட்டியல் ரெடி: ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகம் துவங்கப்பட்டது எப்போது? கடந்த 3 நிதி ஆண்டுகளில் பதிவான பத்திரங்களின் எண்ணிக்கை விபரங்கள் என்னென்ன என்பதையெல்லாம் பட்டியலாக தயாரித்து, விரைவில் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பவும் பதிவுத்துறை உத்தரவிட்டிருக்கிறதாம்.
ஆனால், வருவாய் குறைவான அலுவலகங்களை ஒரேடியாக இழுத்து மூடாமல், அருகிலிருக்கும் வேறு சார் -பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும், அதிக பத்திரங்கள் பதிவாகும் சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட சில கிராமங்களை பிரித்து, வேறு அலுவலகத்துடன் இணைக்க வேண்டும் என்றெல்லாம் அதிகாரிகள் தரப்பிலும் கோரப்பட்டுள்ளதாம்.
குட்நியூஸ்: இப்படி உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் வட்டமடித்து வந்த நிலையில், தற்போது, சட்டப்பேரவையில் தமிழக அரசு குட்நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளது. சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சீர்காழி சட்டமன்ற எம்எல்ஏ பன்னீர்செல்வம், சீர்காழி சார்பதிவாளர் அலுவலகத்தை சீரமைக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சொன்னதாவது:
"பதிவுத்துறையில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டிடங்களில் செயல்படும் 150 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பழமையான கட்டிடம்: அதனை செயல்படுத்தும் விதமாக, பதிவுத்துறை தொடங்கிய 1865-ம் ஆண்டு முதல் 150 ஆண்டுகளாக பழமையான கட்டிடத்தில் செயல்படும் சீர்காழி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு 28.6.2023 அன்று 1.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டிடம் கட்டும் பணிகள் 5.2.2024 அன்று தொடங்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு உடனடியாக புதிய கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், பதிவு கொள்ளிடம் சார்பதிவாளர் அலுவலகம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக முதலமைச்சரால் கடந்த 21.7.2023 அன்று 1.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள்: தற்போது இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஆவணப் பதிவிற்கு வரும் பொதுமக்களுக்கு வசதியான, தகுதியான இடம் தேர்வு செய்யப்பட்ட பின்பு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்" என்றார் அமைச்சர்.
அந்தவகையில், 150 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாக, அரசு தந்திருக்கும் தகவலானது, மிகுந்த கவனத்தை தமிழக மக்களிடம் பெற்றுவருகிறது.












Click it and Unblock the Notifications