சென்னையில் காதலனுடன் தனிக்குடித்தனம்.. ஹர்ஷிதா போட்ட கண்டிஷன்.. நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் காதலன் கண்முன்னே மாடியில் இருந்து குதித்து இளம்பெண் ஹர்ஷிதா வாழ்க்கையை முடித்துக் கொண்ட விவகாரத்தில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீஸ் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்று நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த தன்னை, திருமணத்துக்கு பின்னர் தனிக்குடித்தனம் போக வைக்க விரும்பினார். அவர் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று நினைத்தார். அதேபோல் எதற்கெடுத்தாலும் வாழ்க்கையை முடித்துக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டினார் என்றும் காதலன் வாக்குமூலம் தந்துள்ளார்.
சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியை சேர்ந்த 23 வயதாகும் ஹர்ஷிதா என்ற இளம் பெண் ஒரு கல்லுரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர், வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 26 வயதாகும் தர்ஷன் என்ற இளைஞரை காதலித்தார். சமூக வலைதளம் மூலம் பழகி காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்

திருமணத்திற்கு தடை
ஆரம்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு இருந்த போதிலும் கடந்த பிப்ரவரி மாதம் இருதரப்பு பெற்றோர்களும் பேசி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். வரும் நவம்பர் மாதம் திருமணத்தை நடத்திட திட்டமிட்டனர்.. இந்த நிலையில் தினமும் இருவரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்துக்கு தடை ஏற்பட்டது.
தர்ஷன் ஏற்க மறுப்பு
இளம்பெண் ஹர்சிதா திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால் அதனை தர்ஷன் ஏற்க மறுத்தாராம். தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று ஹர்ஷிதா முக்கியமான நிபந்தனை விதித்தாராம். இதற்கு தர்ஷன் முடியாது என்று தெரிவித்ததாக தெரிகிறது. இதையொட்டி காதல் ஜோடியிடையே மனக்கசப்பு ஏற்பட்டதாம்.
என்ன நடந்தது
இந்தநிலையில் ஹர்ஷிதா கடந்த சனிக்கிழமை இரவு காதலன் தர்ஷனை அவரது வேப்பேரி வீட்டில் சந்தித்து பேசினாராம்.. உறவினர்கள் முன்னிலையில் இருவரும் சமாதானமாக பேசியிருக்கிறார்கள். ஆனால் ஹர்ஷிதா நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லையாம். தர்ஷனும் அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தாரம். இந்த நிலையில்தான, ஹர்ஷிதா திடீரென்று மாடியில் இருந்து குதித்து உயிரை விட்டாராம்.
தர்ஷன் வாக்குமூலம்
இந்த சம்பவம் தொடர்பாக வேப்பேரி போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினார்கள். தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் தர்ஷன் கொடுத்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளளது. இதன்படி தர்ஷன் அப்பா தொழில் அதிபர் ஆவார். அவரது அண்ணன் ஆடிட்டராக உள்ளார். ஹர்ஷிதா மாற்றுத்திறனாளியாக இருந்தபோதும் அவரை தீவிரமாக காதலித்தாராம். அதனால்தான் தனது பெற்றோரிடம் பேசி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தாராம். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு பிறகு ஹர்ஷிதாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது.
தனிக்குடித்தனம்
தர்ஷன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில், திருமணத்துக்கு பின்னர் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்றும், அவரது பெற்றோரிடம் பேசக்கூடாது என்றும் ஹர்ஷிதா நிபந்தனை விதித்தாராம். தான் கிழித்த கோட்டை தாண்டக்கூடாது என்று நிபந்தனை விதித்தாராம். அவரை பற்றி புகழ்ந்து வாட்ஸ் அப்பில் 1,000 வார்த்தைகளை பதிவிட வேண்டும் என்றும் ஹர்ஷிதா கூறினராம். அவருடைய அனுமதி இல்லாமல் செல்போனில் கூட யாரிடமும் நான் பேசக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்தாராம்.
அவரது மனப்பான்மை
ஏற்கனவே அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடைசியில் நின்று போய் உள்ளது. ஹர்ஷிதாவின் செயல்கள்தான் அதற்கு காரணமாக இருந்துள்ளதாம்.. இந்த சம்பவத்தை தன்னிடம் மறைத்துவிட்டார்கள் என்று கூறிய தர்ஷன், எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாக ஹர்ஷிதா மீது குற்றம்சாட்டினாராம்.. சமீபத்தில் அப்படித்தான் கூறிக்கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவரது தாயார் தன்னை உதவிக்கு அழைத்தார். தானே சமாதானம் பேசி ஹர்ஷிதாவின் தற்கொலை முயற்சியை தடுத்து காப்பாற்றினேன். தற்கொலை மனப்பான்மையுடன் அவர் செயல்பட்டது எனக்கு அச்சமாக இருந்தது.
துப்பட்டாவை பிடித்தேன்
இதுகுறித்து அவரது பெற்றோரிடமும் பேசினோம். திருமணத்தை நிறுத்துவது என்று இருதரப்பிலும் பேசி முடிவெடுக்கப்பட்டது. இதுபற்றி பேசுவதற்காகவே ஹர்ஷிதா எங்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால் பேசிக்கொண்டிருந்த போதே மாடிக்கு ஓடினார். நானும் அவரை பின்தொடர்ந்து துப்பட்டாவை பிடித்து இழுத்து காப்பாற்ற முயற்சித்தேன். இது அவரது உறவினர்களுக்கும் தெரியும். ஆனால் என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
தவறான தகவல்
எங்கள் குடும்பத்தை பிடிக்காத சிலர் போலீசாரிடம் தன்னை பற்றி தவறாக தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஹர்ஷிதாவின் சாவுக்கு தான் காரணம் இல்லை. இது அவரது பெற்றோருக்கே நன்கு தெரியும். எனவே இறுதியில் உண்மை வெல்லும் என்று தர்ஷன் வாக்குமூலத்தில் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் ஹர்ஷிதா தற்கொலை செய்ய மாடிக்கு ஓடியதும், அவரை காப்பாற்ற தர்ஷன் பின்தொடர்ந்து ஓடுவதும், துப்பட்டாவை பிடித்து இழுப்பதும் போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications