பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் ஜோசப் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாத காலம் ஆகிறது.. ஆனால் பொறுப்பேற்ற நாள் முதலே, தினந்தோறும் தன்னுடைய செயல்பாடுகள், அறிவிப்புகள் மூலமாக கவனத்தை திருப்பி வருகிறார்.. விஜய் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வந்தாலும், இந்த ஒரு மாத காலம் எப்படி உள்ளது? என்ற விமர்சனமும் இணையத்தை வட்டமடிக்க துவங்கி உள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு 120 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு கடந்த மே 10ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழகத்தின் 12-வது முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.

Vijay TVK Government Tamil Nadu Politics 1 Month Government Ministers Performance Political Analysis 1

1 மாத கால விஜய்யின் தவெக ஆட்சி

ஜூன் 10ம் தேதியோடு அதாவது இன்றோடு விஜய் அரசு பொறுப்பேற்று சரியாக ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், இந்த 30 நாட்களில் அவர் எடுத்த அதிரடி முடிவுகள், எதிர்கொள்ளும் கடுமையான சவால்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் கணக்குகளை சற்று திரும்பி பார்ப்போம்.

பதவியேற்ற முதல் நாளே, தமிழக மக்களின் நீண்டகால தேவைகளை நிறைவேற்றும் வகையில் வீட்டு மின்நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற விஜய் கையெழுத்திட்டார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 'சிங்கப் பெண்' சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டதுடன், மாநிலத்தை உலுக்கி வரும் போதைப்பொருள் கலாசாரத்தை முற்றிலுமாக ஒழிக்க 65 தனிப்படை பிரிவுகள் அமைக்கப்பட்டன.

மே 13 அன்று நடைபெற்ற சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று த.வெ.க. அரசு தனது பலத்தை நிரூபித்தபோது பேசிய விஜய், முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது என்று முதிர்ச்சியான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

நிர்வாகத்தை முடுக்கிவிட திறமையான செயலாளர்களை நியமித்த விஜய், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட புதிய டி.ஜி.பி-யையும் அதிரடியாக நியமித்தார். கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளைக் கண்டறிந்து மூட உத்தரவிட்டதில், முதற்கட்டமாக ஒரே நாளில் 50 கடைகள் உடனடியாக மூடப்பட்டன.

மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என 16 லட்சம் பேருக்குப் பயனளிக்கும் வகையில் அகவிலைப்படியை 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தினார்.

உள்ளாட்சி அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் கோவில்களுக்கு ஆன்லைன் தரிசன முறை போன்ற நிர்வாக ரீதியான மாற்றங்களையும் கொண்டு வந்தார். ஜவுளித் துறையின் நெருக்கடியைப் போக்க பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்குத் தனது முதல் அதிகாரப்பூர்வக் கடிதத்தை எழுதினார்.

அம்மா உணவகங்கள்

தொழில்துறை வளர்ச்சியிலும் தடம் பதிக்கும் வகையில், பி.எம்.டபிள்யூ., யமஹா போன்ற உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டார்.

ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் "அம்மா உணவகங்களை" மீண்டும் சீரமைத்து, தரமான உணவுகளைத் தொடர்ந்து வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இடையில், சர்வதேச செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்துச் செஸ் விளையாடிய நிகழ்வு சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.

கஜானா காலி என்ற விஜய்

ஆட்சியின் தொடக்கத்திலேயே நிதி நெருக்கடிகளை தைரியமாக எதிர்கொண்ட முதலமைச்சர், தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை நிலவுவதாகவும் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இது தொடர்பான முழுமையான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.

ஆனால், விஜய்யின் இந்த ஒரு மாத ஆட்சியை எதிர்க்கட்சிகள் அவ்வளவு எளிதாக விட்டுவிடவில்லை. ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மின்தடைப் பிரசினை, உள்ளாட்சிகளில் குப்பைகள் அகற்றும் பணி மந்தமாக இருப்பது மற்றும் சட்டம்-ஒழுங்கு ரீதியான சவால்களை முன்வைத்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒரு படி மேலே போய் திமுக தலைவர் ஸ்டாலின், தவெக அரசு 3 மாதம் கூட தாங்காது என்று நேரடியாகவே அரசியல் அட்டாக் செய்துள்ளார். அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தனது கண்டனத்தைப் பதிவு செய்யத் தவறவில்லை.


அன்புமணியின் கருத்து

இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் விஜய், தற்போதைய த.வெ.க ஆட்சி மிகவும் சிறப்பாக நகர்ந்து கொண்டிருப்பதாகவும், பொறுப்பேற்று வெறும் ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அதற்குள் எல்லாவற்றையும் உடனே மாற்றிவிட முடியாது என்றும், ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் சீரமைக்கக் குறிப்பிட்ட கால அவகாசம் தேவை என்றும் தனது தரப்பு நியாயத்தை வெளிப்படையாக முன்வைத்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்ற தலைவர்கள், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பெரிய அளவில் ஊழல் குறைந்திருக்கிறது என்றும், சிஸ்டம் மாற 3 மாத காலமாவது ஆகும் என்பதால் தற்போதைய நகர்வுகள் வரவேற்கத்தக்கவை என்றும் ஆதரவு தந்துள்ளனர்.

ஸ்ரீநாத் - கரண்ட் கட் பிரச்சனை

அதேசமயம் சில அமைச்சர்களால் சர்ச்சைகளும், பரபரப்புகளும் தினந்தோறும் எகிறிவிட்டன.. குறிப்பாக மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், ஏற்கனவே துறைமுக நகரமாக உள்ள தூத்துக்குடியைப் புதிய துறைமுக நகரமாக்குவோம் என்று சொன்னது, கச்சத்தீவு விவகாரத்தில் அமைதி காத்தது, பக்கத்து தொகுதியில் சென்று தவறாக நன்றி தெரிவித்தது போன்ற சறுக்கல்களால் சீமானின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.

அதேபோல, சென்னை புறநகர்ப் பகுதிகளில் நிலவும் தொடர் மின்வெட்டுக்கு ஒரு சதவீத 'கருப்பு ஆடுகளின்' சதிவேலையே காரணம் என மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் அளித்த விளக்கம் விவாதத்தைக் கிளப்பியது.

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ் மூலம் கவனம் பெற்றாலும், ராயல் என்ஃபீல்டு மற்றும் மசாகான் டாக் முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.. அதற்கு அவர் எல்&டி நிறுவனத்துடனான 18,600 கோடி ரூபாய் ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பெருகும் அரசியல் அழுத்தங்கள்

டாஸ்மாக்கில் பாட்டிலுக்குக் கூடுதலாக வாங்கும் 10 ரூபாய் இன்னும் தடுக்கப்படவில்லை என்றும், மதுக்கடைகளை மூடிவிட்டு மனமகிழ் மன்றங்களை அரசு அதிகரிப்பதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் குற்றம் சாட்டிய சூழலில், வரும் கூட்டத்தொடருக்குள் அது தடுக்கப்படும் என்றும் எதையும் உடனடியாகச் செய்துவிட முடியாது என்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் பதிலளித்தார்.

இப்படி அமைச்சர்களின் முதிர்ச்சியற்ற நகர்வுகளும் தொடக்கக்கால நிர்வாகச் சவால்களும் த.வெ.க அரசுக்கு அரசியல் அழுத்தங்களை விஸ்வரூபமாக்கியுள்ளன.

மொத்தத்தில் சவாலான அரசியல் சூழலில், கூட்டணிக் கட்சிகளின் முணுமுணுப்புகளையும், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களையும் தாங்கி, முதல் மாதப் பரீட்சையில் விஜய் ஒரு முதிர்ச்சியான முதல்வராகக் காய்களை நகர்த்தியுள்ளார் என்பதே தற்போதைய அரசியல் நிலவரம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+