எம்எல்ஏ பதவிக்கே சிக்கலான வழக்கு.. எடப்பாடிக்கு இன்று கொஞ்சம் ரிலீஃப்! கோ வாரண்டோ வழக்கு ஒத்திவைப்பு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எம்.எல்.ஏ. பதவியில் நீடிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கோ வாரண்டோ வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம், நவம்பர் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
கடந்த 2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமி, தனது வேட்புமனுவில் சொத்து, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை மறைத்து, தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் என்பவர் கோ வாரண்டோ வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், வேட்புமனுவில் சொத்துக்களையும், கல்வித் தகுதியையும் மறைத்த செயல் தவறான நடத்தை மட்டுமல்லாமல், ஊழல் நடவடிக்கை கூட எனத் தெரிவித்துள்ளார். வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்ததுடன், எம்.எல்.ஏ.வாக பெற்ற ஊதியத்தையும் அவர் தெரிவிக்கவில்லை எனவும், சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும், அந்த வழக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், எந்த தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடுவதுடன், அவரை பதவி நீக்கம் செய்து, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை மீண்டும் வசூலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததால் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் வேட்புமனுவில் தகவல்களை மறைத்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மறுக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரம், வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவிப்பது தகுதியிழப்பு ஆகாது எனவும், இது சம்பந்தமாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனை அடுத்து, வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்திருந்தால் தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் எனவும், தகுதில்லாதவர் பதவி வகிப்பதை எதிர்த்து தான் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது என தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தால் கோ வாரண்டோ வழக்கை தாக்கல் செய்யலாம் என்பது தொடர்பான தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
அரசு பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு என இந்திய அரசியலமைப்பில் குடியுரிமை, வயது வரம்பு, கல்வி என குறிப்பிட்ட சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. ஆனால், அந்த தகுதிக்குள் வராத ஒருவர் அந்த பதவியை அடைந்து அரசின் சலுகைகளை முறைகேடாக அனுபவித்தால் அதை எதிர்த்து கோ வாரண்டோ வழக்கு தொடரலாம்.












Click it and Unblock the Notifications