கிளாம்பாக்கம் குடிமகன்களுக்கு ட்விஸ்ட்.. வண்டலூர் டாஸ்மாக் விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: ஒரு காலத்தில் கிளாம்பாக்கம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் இருக்கிறது என்று கூறுவார்கள்.. அப்படித்தான் இருந்தது. ஆனால் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில் தான் வண்டலூர் தேசிய உயிரியல் பூங்கா இருக்கிறது என்று கூறும் அளவிற்கு மாறி உள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் டாஸ்மாக் ஒன்று செயல்படுகிறது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள பகுதி என்பது சென்னையில் மிக வேகமாக வளரும் பகுதியாக இருக்கிறது. இங்கு தான் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஜிஎஸ்டி சாலை இருக்கிறது. இந்த சாலையில் பல லட்சம் வாகனங்கள் தினமும் செல்கின்றன. இந்த சாலையில் தான் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதியான சென்ட்ரலில் இருந்து 30 கிமீ தூரத்தில் கிளாம்பாக்கம் இருக்கிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது வண்டலூர் உயிரியல் பூங்காவின் பக்கத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பின்னர், அதனை சுற்றியுள்ள வண்டலூர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தினமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கும் பல ஆயிரம் பேர் வருகிறார்கள்.
இப்படி மக்கள் அதிகம் வந்து போகும் உயிரியல் பூங்கா அருகே ஒரு டாஸ்மாக் கடை இயங்குகிறது. இந்த கடை தான் கிளாம்பாக்கம் வரும் குடிமகன்கள், குடிப்பதற்கும், மதுபாட்டில்களை வாங்கி செல்வதற்குமான கடையாக இருக்கிறது. இந்த கடையால் அந்த பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். குடித்துவிட்டு கண்ட இடங்களில் பாட்டில்களைவீசுவது நடப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில் வண்டலூர் தேசிய உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையினால் கடும் பாதிப்பு உள்ளதால், அதை இடமாற்றம் செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், ரவிச்சந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.சிங்காரவேலன் ஆஜராகி, "மதுபோதையினால் இளைய தலைமுறையினர் கடுமையாக பாதிக்கப்படுவதால், மதுபான கொள்கையை அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு கருத்து தெரிவித்திருந்தது.
தற்போது இந்த மதுபானக்கடையினால், வண்டலூரில் உள்ள வனப்பகுதியில் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகள் நிறைந்துள்ளன. அதற்கு அருகே மான்கள் மேய்வதால், அதன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளன. அதுமட்டுமல்ல, டாஸ்மாக் அருகே உள்ள சாலையின் பெயர் காந்தி ரோடு என்பதால், பெயருக்காவது மதுக்கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும்'' என்று வாதிட்டார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், "விதிகளுக்கு உட்பட்டுதான் மதுக்கடை அமைந்திருந்தாலும், அதற்கு எதிரே உயிரியல் பூங்கா உள்ளதால், 2 வாரத்துக்குள் மதுகடையை இடமாற்றம் செய்வது குறித்து அரசு பரிசீலிக்கலாம். விசாரணையை டிசம்பர் 5-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications