பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யாமல் தூர் வார தடை கோரி வழக்கு
சென்னை: சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர் வாரி ஆழப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர் வார தடை கோரி பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர் வாரி ஆழப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆழப்படுத்தி நீர் தேக்கமாக மாற்றினால் அங்குள்ள பல்லுயிரின வளத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், விஞ்ஞான ரீதியான எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளாமல் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை மேம்படுத்துவதற்கும், பாதுகாக்கவும் கடந்த 2012 ஆம் ஆண்டு 'பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு ஆணையம்' அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் மூலமாக அல்லாமல் தூர் வாரும் திட்டத்திற்காக சுமார் 21 கோடி ரூபாயை நேரடியாக வனத்துறைக்கு தமிழக அரசு வழங்கியது சட்ட விரோதம் எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.