மருத்துவக் உதவிப் பேராசிரியர் வேலை.. வயது வரம்பை 45 ஆக உயர்த்த மத்திய அரசுக்கு உத்தரவு
சென்னை: மருத்துவ கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பை 40ல் இருந்து 45 ஆக உயர்த்தும் வரைவு அறிவிப்பாணைக்கு மூன்று வாரங்களில் ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ கல்லூரி ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதி ஒழுங்குமுறை விதிகளில் 2017ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, மருத்துவ கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கான வயது வரம்பு 40 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விதியை எதிர்த்து சுரேஷ்குமார் உள்ளிட்ட ஆறு மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மருத்துவ மேற்படிப்பு முடித்த பின் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இந்த வயது உச்ச வரம்பை அமல்படுத்தினால் ஊரக பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த திருத்தத்தை கைவிடும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பை 40 வயதில் இருந்து 45 ஆக உயர்த்த கோரி மத்திய சுகாதார துறைக்கு வரைவு அறிவிப்பாணை அனுப்பியுள்ளதாகவும், அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை எனவும் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வரைவு அறிவிப்பை ஏற்று, வயது வரம்பை 45 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய சுகாதார துறை தரப்பில் கூறப்பட்டதை அடுத்து, மருத்துவ கவுன்சிலின் வரைவு அறிவிப்பாணைக்கு மூன்று வாரங்களில் ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதை அமல்படுத்த தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.