10 கோடி மதிப்புள்ள நில மோசடி.. அதிமுக பிரமுகருக்கு எதிரான வழக்கு .. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த மன்னார்குடி பஞ்சாயத்து யூனியன் சேர்மனுக்கு எதிரான நில மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,தனது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்தும், மேலும் தனக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்தும் 20 கோடி மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி எம்.அமுதா, அதி.மு.க.வைச் சேர்ந்த மன்னார்குடி பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மனோகரன் உள்ளிட்டோர்தான் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2017ஆம் ஆண்டு மாவட்டக் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி. சந்திரசேகரன் வழக்கை சி பி சி ஐ டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். சி பி சி ஐ டி போலீசார் விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications