பாமக மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா? நாளை சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது வழக்கு!
சென்னை: பாமக சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் மே 11 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை நடத்த தடை விதிக்க கோரி வடநெமிலி பஞ்சாயத்து தலைவர் பொன்னுரங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 2013 ஆம் ஆண்டு பாமக, வன்னியர் சங்கம் நடத்திய சித்திரை முழு நிலவு திருவிழாவில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சாதிய கலவரம் உருவாகி, பட்டியலின மக்கள் தாக்கப்பட்டு, அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு பின், சித்திரை முழு நிலவு கூட்டத்தில் அரசு அனுமதி அளிப்பதில்லை. இந்நிலையில் திருபோரூர் தாலுகாவில், திருவிடந்தை நித்திய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலத்தில் பாமக சார்பில் சித்திரை முழு நிலவு கூட்டம் நடத்துவது, வடநெமிலி பஞ்சாயத்து பகுதியில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொதுமக்களின் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் உருவாகும் சூழல் இருப்பதால் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவுக்கு நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சித்திரை முழு நிலவு கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என வடநெமிலி பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றி இருப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பாக விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications