அம்பானி, அதானியை ஓரம்கட்டிய தமிழர்.. இந்தியாவில் சிறந்த நிறுவனம் HCL தான்! டைம்ஸ் லிஸ்ட்டை பாருங்க
சென்னை: புகழ்பெற்ற டைம்ஸ் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவை பொறுத்தவரை எச்சிஎல் தான் சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸின் முழு லிஸ்ட் வருமாறு:
டைம் பத்திரிகை (Time Magazine)அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது ஒரு வாராந்திர பத்திரிகையாகும். மிகவும் புகழ்பெற்ற இந்த டைம் பத்திரிகை சார்பில் மிகவும் புகழ்பெற்ற நபர்கள், புகழ்பெற்ற நிறுவனங்கள் என்ற பெயரில் அடிக்கடி பட்டியல் வெளியிடப்படும்.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சிறந்த நிறுவனங்களின் பட்டியல் என்பது வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் 2024ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
இதில் உலகளவில் மொத்தம் டாப் 1,000 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியல் என்பது 3 அம்சங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் திருப்தி, வருவாய் வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நிறுவனங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் உலகளவில் முதலிடத்தில் ஆப்பிள் நிறுவனம் உள்ளது. 2வது இடத்தில் ஆக்சென்ச்சர் ஐடி நிறுவனம், 3வது இடத்தில் மைக்ரோசாஃப்ட், 4வது இடத்தில் பிஎம்டபிள்யூ கார் நிறுவனம், 5வது இடத்தில் அமேசான் உள்ளிட்டவை உள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவின் 22 நிறுவனங்கள் முதல் 1000 இடங்களில் இடம்பிடித்துள்ளது. மேலும் இந்தியாவில் சிறந்த நிறுவனமாக அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளி தமிழரின் நிறுவனம் முதலிடத்தில் பிடித்துள்ளது.
அதாவது டைம்ஸ் பத்திரிகையின்படி இந்தியாவின் சிறந்த நிறுவனமாக எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐடி நிறுவனத்தை சேர்ந்த தமிழகத்தை சேர்ந்த சிவ் நாடார் தொடங்கி தலைவராக செயல்பட்டு வந்தார். தற்போது அவரது மகள் ரோஷிணி நாடார் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்து வருகிறார். இந்த நிறுவனத்தின் தலைமையிடம் என்பது உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவாகும்.
உலகம் முழுவதும் மொத்தம் 60 நாடுகளில் எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நடப்பு 2024-25 நிதியாண்டில் முதல் காலாண்டில் ஜுன் மாதம் வரை எச்சிஎல் நிறுவனத்துக்கு வருவாய் என்பது ரூ.28,057 கோடியாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 6.6 சதவீதம் அதிகமாகும். இதில் ரூ4,257 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 20.45 சதவீதம் அதிகமாகும். இதனால் தான் இந்தியாவில் சிறந்த நிறுவனமாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது என்று டைம்ஸ் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.
இருப்பினும் கூட உலகளவில் பார்த்தால் எச்சிஎல் டாப் 100 லிஸ்ட்டில் கூட இடம்பெறவில்லை. எச்சிஎல் நிறுவனம் 112வது இடத்தில் உள்ளது. இன்போசிஸ் 119 வது இடத்திலும், விப்ரோ 134வது இடத்திலும் உள்ளது. இதில் அதானி, அம்பானி நிறுவனம் மிகவும் பின்தங்கி உள்ளது. இந்த பட்டியலில் அதானியின் அதானி குழு நிறுவனங்கள் 736வது இடத்திலும், அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் 736வது இடத்திலும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications