திருவள்ளூரில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை தாக்கிய தலைமை காவலர்.. அதிரடியாக பணியிடை நீக்கம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற கர்ப்பிணி உள்பட 3 பெண்களை காவலர் ஒருவர் தாக்கிய வீடியோ வெளியாகி இருந்தது. இதுபற்றி கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், குற்றவாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்டோரை காக்க வேண்டிய போலீசாரே பாதிக்கப்பட்டோரை தாக்கினால், திராவிட மாடல் ஆட்சியில் எங்கு சென்று நீதி கேட்பது என்று புரியவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் பெண்களை தாக்கிய புகாரில் காவலர் ராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்துள்ள கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் சிவாஜி என்பர் தங்களிடம் தகாத முறையில் நடந்ததாக கூறி புகார் அளிக்கச் சென்ற 5 மாத கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை தலைமைக் காவலர் ராமன் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியறுத்தின. மேலும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
குற்றஞ்சாட்டப் பட்டவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டோரை சரமாரியாகத் தாக்கும் அளவிற்கு காவல்துறை அதிகாரிக்கு துணிச்சல் எங்கு இருந்து வந்தது? அதிலும் ஒரு ஏழை கர்ப்பிணி பெண்ணை தாக்கும் அளவிற்கா காவல்துறையினரிடம் மனிதத்தன்மை மலிந்துவிட்டது? குற்றவாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்டோரை காக்க வேண்டிய காவல்துறையே பாதிக்கப்பட்டோரை தாக்கினால், திராவிட மாடல் ஆட்சியில் எங்கு சென்று நீதி கேட்பது என்று புரியவில்லை.
காவல்துறையின் மாண்பை கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு தீர விசாரணை செய்து, அதிகார மமதையில் அராஜகத்தின் ஊற்றிடமாக செயல்பட்டு மூன்று பெண்களை தாக்கிய காவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த நிலையில், கர்ப்பிணியைத் தாக்கிய புகாரில் கனகம்மாசத்திரம் காவல்நிலைய தலைமைக் காவலர் ராமனை சஸ்பெண்ட் செய்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications