'அப்போது' எதுவுமே பேசவில்லையே.. எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ்க்கு மா.சு. 'நச்' பதிலடி
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசின் தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்காததால் குடியரசுத் தலைவர் அலுலவகம் திருப்பி அனுப்பிய போது ஓ பன்னீர்செல்வம் எதுவுமே பேசவில்லையே, இப்போது அரசியல் செய்ய பேசுகிறாரா என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்: அப்போது அவர் பேசும் போது.
'ஓபிஎஸ் அண்மையில் விடுத்த அறிக்கை உண்மையில் அவர் மாணவர்களுக்காக பேசுகிறாரா அல்லது அரசியல் செய்ய பேசுகிறாரா என்று புரியவில்லை.
நீட் தமிழகத்தில் நுழைந்தது ஓபிஎஸ் துணை முதல்வராக இருக்கும்போது தான். அப்போது மாணவர்களுக்காக பேசவில்லை. எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான், ஆனால் நீட் தேர்வு பயிற்சி முறை குழப்பம் தருவதாக பேசுகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது..

திமுக அரசு நடவடிக்கை
நேற்று முதல்வர் டெல்லியில் பிரதமரை சந்தித்த பின் பேசும்போது நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போதைய நிலையில் நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது, மாணவர்களும் தேர்வுக்கு தயாராக வேண்டிய தேவை இருக்கிறது. நீட் தேர்வு வேண்டாம் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது

திருப்பி அனுப்பியது ஏன்
நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்காததால் குடியரசுத் தலைவர் அலுலவகம் திருப்பி அனுப்பியது. அதனால் தான் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் தெளிவான தீர்மானம் நிறைவேற்றப்படும்.

மூன்றாவது அலை
கொரோனாவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு நிதி வழங்குவதாக மத்திய மாநில அரசுகள் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவே கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா மூன்றாம் அலை வர கூடாது. அப்படி வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

மருத்துவமனைகள்
மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்று கணிக்கப்படுகிறது, எனவே அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களை தயார் நிலையில் நடவடிக்கைகளை செய்து வருகிறோம். கரும்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துகள் தமிழகத்தில் தேவையான அளவிற்கு உள்ளது" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications