வாடகைத் தாய் சர்ச்சை: நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விசாரிக்கிறதா சுகாதாரத் துறை?
சென்னை: வாடகைத் தாய் சர்ச்சை தொடர்பாக நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்னேஷ் சிவன்- நயன்தாராவுக்கு கடந்த அக்டோபர் 9ஆம் தேதி இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டிருந்தார். இரட்டை குழந்தைகளின் கால்களை நயனும் விக்கியும் கொஞ்சுவது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்
திருமணமான 4 மாதங்களில் எப்படி குழந்தை என ரசிகர்களும் நெட்டிசன்களும் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதியில் ஒருவருக்கு இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என்ற நிலை இருந்தால் மட்டுமே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பது சட்டம்.

நயன் விக்கிக்கு பொருந்தாது
இதில் முதல் விதியே நயன் விக்கிக்கு பொருந்தவில்லை. திருமணமாகி 4 மாதங்கள்தான் ஆனது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பர் என தெரிவித்திருந்தார்.

பிரபல மருத்துவமனை
இந்த நிலையில் சென்னையின் பிரபல மருத்துவமனை ஒன்றில்தான் நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்துகிறார்கள். அந்த விசாரணையில், நயன்தாராவுக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்திய மருத்துவர்களிடமும் விசாரணை நடைபெறவுள்ளது.

4 மாதங்களாகிறது
நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் வாடகைத் தாய் சட்டம் மீறப்பட்டுள்ளதா, வாடகைத் தாய் முறைபடி நயன்- விக்கி தம்பதிக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதா, இந்த முறையில் ஏதேனும் விதிகள் மீறப்பட்டுள்ளனவா என்றெல்லாம் விசாரணை நடத்தப்படுகிறது.

வாடகைத் தாய்
திருமணத்திற்கு முன்பே வாடகைத் தாயின் வயிற்றில் நயன்- விக்கியின் கரு வளர்ந்துள்ளது. இதனால் விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்தும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரிக்கிறது சுகாதாரத் துறை. மேலும் வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் எப்போது கரு செலுத்தப்பட்டது, நயன்தாரா - விக்கி தம்பதியில் யாரேனும் ஒருவருக்கு இயற்கை முறையில் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்ற சான்றிதழ் பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

நயன்- விக்கியிடமும் விசாரணை நடத்த முடிவு
சென்னை மருத்துவமனையில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியிடமும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையின் முடிவில்தான் நயன்தாரா- விக்கி தம்பதியை சுற்றியிருக்கும் சர்ச்சைக்கு ஒரு பதில் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications