சென்னைக்கு முக்கிய தகவல்.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
சென்னை: தென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறைவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை கேரளாவில் நேற்று தொடங்கியது. கேரளாவின் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோட்டயம் உள்பட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இரண்டாவது நாளாக இன்றும் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. சில இடங்களில் மழை பெய்த போதிலும், வெயில் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாயப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில் "தென் மேற்கு பருவக்காற்று அரபிக் கடல் பகுதியில் வலுவடைந்து உள்ளது. இதன் காரணமாக தெற்கு அரபிக் கடல் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, கன்னியாகுமரி கடல் பகுதியில் மேகங்கள் அதிகரித்திருக்கிறது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, விருதுநகர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி உள்பட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவடட்ங்களிலும், ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை பெய்யும் போது காற்று 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அதிக பட்ச வெப்பநிலை 100.4 டிகிரியாக இருக்கும். சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறைவதற்கு இன்னும் ஒரு வாரம் வரை ஆகும். தென்மேற்கு பருவமழை தமிழகத்துக்கு இந்த ஆண்டு இயல்பான அளவுக்கு மழைப் பொழிவு இருக்கும்" இவ்வாறு கூறினார்கள்.












Click it and Unblock the Notifications