நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இடியுடன் கூடிய கனமழை - பொங்கல் வரைக்கும் மழை வெளுக்கப் போகுது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
சென்னை: வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஜனவரி 12ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் இறுதி முதல் பெய்து வருகிறது. நிவர், புரேவி புயல்கள் காரணமாக பல மாவட்டங்களில் நல்ல மழை கிடைத்தது. ஏரிகள் நிரம்பியுள்ளதால் தண்ணீர் பஞ்சம் தீர்ந்துள்ளது. பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை ஜனவரி 12ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடகடலோரத்தில் லேசான மழையும், தென் கடலோரத்தில் மிதமான மழையும் பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.

இடி மின்னலுடன் மழை
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடலோர மாவட்டங்களில் மழை
தஞ்சை, திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை ,கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை ஏனைய கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் புவியரசன் கூறியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை நீடிக்கும்
ஜனவரி 6ஆம் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ,கடலூர் ,விழுப்புரம், தேனி ,நீலகிரி ,கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக புவியரசன் கூறியுள்ளார். ஜனவரி 7ஆம் தேதியும் 8ஆம் தேதியும் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை ஜனவரி 12 வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

சென்னையில் 48 மணிநேரத்தில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்றும் வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications