தட்டி எடுக்கப்போகும் மிக கனமழை..2 நாட்களுக்கு வெளுத்து வாங்குமாம்..சூறாவளியும் வீசுமாம்!
சென்னை: வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா - வடதமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றைய தினம் டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் பல ஊர்களில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. ஈரோடு, மதுரை மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் ஆறு போல வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. திருமயம், திருப்பத்தூர் பகுதிகளில் தலா 11 செமீ மழை பதிவாகியுள்ளது. தேன்கனிக்கோட்டை, கொத்தவாச்சேரி, மேமாத்தூர் பகுதிகளில் தலா 10 செமீ மழை பதிவாகியுள்ளது. பவானி, நத்தம், கோவிலாங்குளம், வேப்பூர், சிவகங்கை, அருப்புக்கோட்டை, இடையப்பட்டி பகுதிகளில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது.
மதுரை தெற்கு, மதுரை வடக்கு, தனியாமங்களம் , ஹரூர், விருதுநகர் பகுதிகளில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது. குறிஞ்சிப்பாடி, தல்லாகுளம், சோலையார், விரகனூர் அணை, ஓசூர் , செங்கம், லப்பைக்குடிகாடு தலா 7 செமீ மழையும் கோடநாடு , துறையூர், மேட்டூர், மேலூர், விருதுநகர், திருச்சுழி, அரிமளம், காட்டுமலையூர் தலா 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. பரங்கிப்பேட்டை, மானாமதுரை, மயிலாடுதுறை, தொழுதூர், ஜெயம்கொண்டம் , மேட்டுப்பட்டி, கிருஷ்ணகிரி, புலிப்பட்டி பகுதிகளில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

மிக கனமழை
இன்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி கோவையில் மிக கனமழை
16ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
17ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு மாவட்டங்களில் கனமழை
18ஆம் தேதியும், 19ஆம் தேதியும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் கனமழை
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
18 மற்றும் 19ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications