இடி மின்னலுடன் 3 நாட்களுக்கு மிக கனமழை... சூறாவளியும் வீசுமாம் - வானிலை அறிவிப்பு
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வரப்போகிறது. பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் மாலை நேரங்களில் மழை கொட்டித்தீர்க்கிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கொட்டி வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் திருவண்ணாமலையில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. ராசிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 7 செமீ மழையும், தாமரைப்பாக்கம், சீர்காழி, கொரட்டூர் பகுதிகளில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. செய்யாறு, கலசப்பாக்கம், தேவாலா, தளி, பூதலூர், சோலையாறு, திருக்கழுங்குன்றம், சோழிங்கநல்லூர், கள்ளக்குறிச்சியில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இன்று முதல் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
'ஆரஞ்சு அலர்ட்..' கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு
வெப்பச்சலனத்தால் மழை
வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் ,ஈரோடு ,சேலம் கடலூர்,கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம்,ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மிக கனமழை
வருகின்ற 15ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஈரோடு ,சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ,கள்ளக்குறிச்சி ,அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
கவனம் மக்களே
16ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி தருமபுரி ,சேலம் ,நாமக்கல் ,திருச்சி, புதுக்கோட்டை,தஞ்சாவூர், திருவாரூர் ,அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 17ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி ,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ஆம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரை நோக்கி நகரும்.
மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
இன்று முதல் 16ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் , கேரளா, லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் 15ஆம் தேதி வரைக்கும் தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.