தமிழகத்தில் கனமழை: ஆகஸ்ட் 18 வரை 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கொட்டித்தீர்க்கும்
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரைக்கும் நீலகிரி மாவட்டத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை நாட்டின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவினால் பல உயிர்கள் பலியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது. தர்மபுரி, மேட்டுப்பாளையத்தில் தலா 4 செமீ மழையும் மேல் பவானி, க்ளென்மோர்கண், மதுக்கூர்,பட்டுக்கோட்டை,குன்னூர், வால்பாறை, கறம்பக்குடி, தருமபுரி, உதகமண்டலத்தில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார், குன்னூர், அன்னவாசல், மயிலாடுதுறை, தேவலா, கோத்தகிரி,சோலையார் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றுமுதல் வரும் 18ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் இயக்குநர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

இன்று கனமழை
கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இடி மின்னலுடன் மழை
ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுச்சேரி, காரைக்கால்
வெப்பச்சலனம் காரணமாக ஆகஸ்ட் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.

சென்னையில் மேக மூட்டம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

5 நாட்களுக்கு கவனம்
நாளை முதல் 17ஆம் தேதி வரைக்கும் ஆந்திரா கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரைக்கும் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications