தொடர்ந்து 4ஆவது நாள்.. சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. இந்த 4 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்
சென்னை: நான்காவது நாளாக இன்றும் தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

தலைநகர் சென்னை
குறிப்பாக, தலைநகர் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு நிலவிய கோடை வெயில் காரணமாகப் பல சிரமங்களை எதிர்கொண்ட சென்னை மக்களை குஷிப்படுத்தும் வகையில் தலைநகரில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.

4ஆவது நாள்
இந்நிலையில், தலைநகர் சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. போரூர், வளசரவாக்கம் எனத் தலைநகரில் பரவலான இடங்களில் மழை பெய்தது. பல்வேறு இடங்களிலும் மழை நீர் முறையாக வடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

வானிலை மையம்
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தனது அறிக்கையில் கோவை, தேனி, நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை தொடரும் என்றும் திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் கோவை, திருவள்ளூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட மேற்கு வங்கக் கடலில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்பதால் தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் 40-50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் இதனால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications