இரவு முழுக்க புரட்டி எடுத்த மழை.. சென்னையில் "சம்பவம்".. டெல்டா மாவட்டங்களில் விளாசிய கன மழை!
சென்னை: தமிழ்நாடு முழுக்க நேற்று பரவலாக மழை பெய்தது. பருவமழை தொடங்கி நிலையில் நேற்று மழையின் தீவிரம் உச்சம் அடைந்தது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.
இன்று மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை நிலவரம்
சென்னையில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்தது. முக்கியமாக மாலை நேரத்திற்கு பின் சென்னையில் மழையின் தீவிரம் அதிகரித்தது. சென்னையில் மழை வெள்ளம், அவசர தேவைக்கு செல்போன் எண்கள், வாட்ஸ்அப் எண்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை - நம்ம சென்னை செயலி மூலம் மக்கள் புகார் அளிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்து உள்ளது. மழைநீர் தேக்கம், குடிநீருடன் கழிவுநீர் கலப்பு போன்ற புகார்களை அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

வெள்ளம்
குடிநீர் வரவில்லை, மின்வெட்டு உள்ளிட்ட புகார்களை 1913 என்ற எண்ணிலும் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் எப்போதும் மழை பெய்தால் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வருகின்றனர். பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.

கனமழை
நேற்று இரவு சென்னை முழுக்க கனமழை பெய்தது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது. இதனால் பெரிய அளவில் இப்போது வரை சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை.

டெல்டா
சென்னையை போலவே செங்கல்பட்டு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று அதிகாலையில் இருந்து மழை பெய்தது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. வேலூர், திருப்பத்தூர்,தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பிற்பகலுக்கு பின் மழை பெய்தது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் இரவு முழுக்க மிக கனமழை பெய்தது.புதுக்கோட்டை மாவட்டத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்தது. தென் மாவட்டங்களில் இன்னும் மழை தீவிரம் எடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications