அடுத்த 3 மணி நேரம்.. தூத்துக்குடி + நெல்லை + குமரி டார்கெட்.. கொளுத்தப்போகும் கனமழை! வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், நெல்லை, குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்தது. தற்போது 2 நாட்களாக சென்னையில் வெயில் அடித்து வருகிறது. அதே சமயத்தில் தென் மாவட்டங்களில் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

தென் மாவட்டங்கள் மற்றும் வட மேற்கு மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு அதிகனமழை பெய்தது. இரவு 11 மணிக்கு மேல் இடி மற்றும் மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. திடீரென நேற்று இரவு பெய்த மழையால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வீடுகளில் சேதம் ஏற்பட்டது.
இன்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு 7 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, வேலூர், குமரி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அடுத்த 3 மணி நேரத்தில் திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications