சென்னை, புறநகர்களில் கன மழை.. கடலோர மாவட்டங்கள் முழுவதும் மழை!
Recommended Video
சென்னை: சென்னை நகரிலும், புறநகர்களிலும் கடந்த ஒரு மணி நேரமாக மழை பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய மிதமான முதல் கன மழையாக இது இருப்பதால் சென்னை நகரமே இருண்டு போய்க் காணப்படுகிறது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக வட தமிழகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்புகள் கூறியுள்ளன.
இந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல் சென்னையில் கன மழை பெய்யத் தொடங்கியது. காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. நகரிலும், புறநகர்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தம்பித்துள்ளது. இதே மழை இன்னும் சில மணி நேரம் நீடித்தால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும்.
பள்ளி, கல்லூரிகள் விடும் நேரத்தில் மழை பெய்து வருவதால் மாணவர்கள் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மட்டுமல்லாமல் கடலோர தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து அந்த பகுதி மக்களை கலங்கடித்து வருகிறது.