சென்னையில் டமால் டுமீல் மழை.. குளிர்ந்த காற்றுடன் கனமழை.. எல்லாம் புரேவியால்தான்!
சென்னை: புரேவி புயல் இலங்கை அருகே கரையை கடக்கத் தொடங்கிய நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புரேவி புயலானது இலங்கையின் திருகோணமலை- பருத்தித் துறை இடையே முல்லைத் தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கிவிட்டது. இந்த புயல் அங்கு வலுவிழந்து மன்னார் வளைகுடாவுக்கு நள்ளிரவில் நகர்கிறது.
இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. வளசரவாக்கம், ராமபுரம், போரூர், முகப்பேர், அண்ணாநகர், செங்குன்றம், புழல் பகுதியிலும் பரவலாக மழை பெய்கிறது. அயனாவரம், அசோக் நகர், மேற்கு மாம்பலம், வண்ணாரப்பேட்டையிலும் மழை பெய்கிறது.

மயிலாப்பூர்
அது போல் பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, கோடம்பாக்கம், எம்ஆர்சி நகர் பகுதிகளிலும் வேளச்சேரி, தரமணி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. இன்று காலை முதலே சென்னையில் வெயில் இன்றி குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது.

மழை
காற்றும் வீசியது. இந்த மழை இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிவர் புயலால் பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீர் இன்னும் வடியவில்லை. இதில் புதிதாக ஒரு மழையா என மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

தென் தமிழகம்
நாளை மன்னார் வளைகுடாவுக்கு வந்தவுடன் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புரேவி புயல் கரையை கடக்கும் வரை மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடல் சீற்றம்
இந்த புயலால் பாம்பனில் கடற்சீற்றத்துடன் காணப்படுகிறது. நாளை மன்னார் வளைகுடாவிலிருந்து குமரி கடலுக்குள் புரேவி நகர்கிறது. பின்னர் குமரி கடல் - பாம்பன் இடையே புரேவி புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது. இதனால் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.












Click it and Unblock the Notifications