காலையில் நல்லாதான் இருந்தது.. திடீரென படபடவென பெய்த கனமழை.. கூலிங்கான சென்னை!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று முன் தினம் சென்னையில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த இரு தினங்களாகவே சென்னையில் பெரும்பாலான ஏசிகளுக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் காலை வெயில் காய்ந்தது. சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில் இன்று காலை முதலே வெயில் குறைந்து காணப்பட்டது. இதையடுத்து திடீரென படபடவென கனமழை பெய்யத் தொடங்கியது.
இந்த மழை கடந்த ஒரு மணி நேரமாக நிற்காமல் பெய்து கொண்டிருக்கிறது. காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் திரும்பியவர்கள் நேற்று சென்னை திரும்பினால் கூட்டம் அதிகமாக இருக்கும் என கருதி இன்றைய தினம் காலை கிளம்பினர். இரு சக்கர வாகனங்களில் வந்து கொண்டிருந்த அவர்கள் மழையில் சிக்கினர்.

கனமழை காரணமாக சாலையில் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. முகப்பேர், நொளம்பூர், அம்பத்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, வடபழனி, தாம்பரம், பல்லாவரம், கோயம்பேடு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் 4ஆவது வாரம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பே கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கனமழையால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications