வடியாத வெள்ளத்தால் தவிக்கும் மக்கள் - சென்னையில் சனிக்கிழமை முதல் மீண்டும் கனமழை
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த வேறுபாடு இன்னும் அதிகரிக்கவில்லை.
சென்னை: சென்னையில் சனிக்கிழமை முதல் மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். கடந்த 7ஆம் தேதி முதல் விட்டு விட்டு பெய்து வரும் அதிகனமழையால் சென்னையிலும் புறநகரிலும் வெள்ளநீர் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் ஒரு பெருமழையை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது சென்னை மாநகரம்.
வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளநீரில் தத்தளித்து வருகின்றன. வளி மண்டல மேலடுக்குச் சுழற்சியால் கடந்த 24 மணி நேரத்தில் போடிநாயக்கனூர், ராமநாதபுரம் கே.வி.கே. பகுதியில் தலா 13 செ.மீ மழையும், சங்கரன்கோவிலில் 6 செ.மீ, ராமேஸ்வரம், கூடலூர், வீரபாண்டி, ஆயிக்குடி, கடலாடி, ஆழியார் சூரங்குடியில் தலா 5 செ.மீ, தேக்கடியில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. வாலினோக்கம், திருவாடானை, மாயனூர் மண்டபம், முதுகுளத்தூர், ராமநாதபுரம், பாம்பன், கொடுமுடி, சிவகாசி, கழுகுமலை, கடம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், ஆர்.எஸ்.மங்கலம், காயல்பட்டினம், ராஜபாளையத்தில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புவியரசன், தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த வேறுபாடு இன்னும் அதிகரிக்கவில்லை. அது அதே இடத்தில் நகராமல் நிலை கொண்டு இருப்பதால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஆவதாக கூறினார்.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாகி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்று கூறிய புவியரசன், இன்று ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறினார். வரும் 27ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
24, 25ஆம்தேதிகளில் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 26-ந்தேதி தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
27, 28ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Recommended Video
சென்னையில் பெய்த தொடர் மழையால், புறநகர் பகுதிகளான வேளச்சேரி விஜய நகர், ராம்நகர், சேலையூர், முடிச்சூர், வரதராஜபுரம், செம்மஞ்சேரி தாழம்பூநகர், சுனாமி குடியிருப்பு, செம்பாக்கம் பெத்தேல் நகர், பெருங்குடி கல்லுக்குட்டை, அய்யப்பன் தாங்கல் சாய் நகர், பூந்தமல்லி எல்.கே.பி. நகர், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. பல நாட்களாகியும் வெள்ளநீர் வடியாமல் மக்கள் தத்தளித்து வருகின்றனர். சென்னையில் அவ்வப்போது பெய்யும் மழையால் தி.நகரில் வெள்ளநீர் வடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் மிகப்பெரிய மழையை சென்னை மாநகரம் எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.