சென்னையின் பல இடங்களில் மீண்டும் கொட்டிய கனமழை.. புலம்பி தவிக்கும் சென்னைவாசிகள்!
சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்கியது. டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டல மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது.
சென்னையில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு பெய்த மழையை சென்னைவாசிகள் இன்னும் மறக்கவில்லை. தொடர்ந்து 5 நாட்களாக சென்னையில் மழை விடாமல் கொட்டியது.

வெள்ளைக்காடாக காட்சியளித்த சென்னை
பேய்மழை காரணமாக சென்னையின் எழும்பூர், வடபழனி, சைதாப்பேட்டை, கிண்டி என நகரின் முக்கிய இடங்களும், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்தன.
ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளைக்காடாக காட்சியளித்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கின.

போக்குவரத்தும் பாதிப்பு
வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். பல இடங்களில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியதால் அவர்களை படகுகள் மூலம் மீட்டனர். சாலை போக்குவரத்து பல இடங்களில் முடங்கியுள்ளது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஓய்வு எடுத்து வந்தது
சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை அதன்பிறகு சற்று ஓய்வு எடுத்து வந்தது. ஆனாலும் சென்னையின் சில இடங்ககளில் இன்னும் மழைநீர் விடியவில்லை. சென்னையில் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.

மீண்டும் மழை
இந்த நிலையில் சென்னையின் பல பகுதிகளில் இன்று காலையும், மாலையும் பலத்த மழை கொட்டியது. சென்னையின் அண்ணாநகர், வளசரவாக்கம் உள்ளிட்ட நகர் பகுதியிலும் திருமங்கலம், முகப்பேர், மதுரவாயல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மீண்டும் தண்ணீர் தேங்கியது. ''ஏற்கனவே பெய்த மழையையே தாங்க முடியல. இதுல இன்னொரு மழையா'' என்று சென்னைவாசிகள் புலம்பி தவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications