கொட்டித்தீர்த்த கனமழை.. ஜில்லென்று மாறிய வானிலை.. உற்சாகத்தில் சென்னைவாசிகள்
சென்னை: காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சென்னையில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக மழை பெய்துள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது. வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே சென்னையில் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது.
சென்னை தாம்பரம், பெருங்களத்தூர், மாங்காடு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. அதே போல நகரின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. கிண்டி, ஆலந்தூர், முகப்பேர், கோயம்பேடு, அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் சாலையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் போல வெயில் சுட்டெரித்த நிலையில் சட்டென்று கொட்டித்தீர்த்த கனமழையால் வானிலை ஜில்லென்று மாறி குளிர் காற்று வீசியது. கனமழையால் ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் சென்னைவாசிகள் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications