திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நீலகிரி.. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கன மழை
சென்னை: தமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நீலகிரி, திருப்பத்தூர் உட்பட பல மாவட்டங்களில் நேற்று கன மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. லவ்டேல், தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்த காரணமாக சொற்ப எண்ணிக்கையில் வந்திருந்த சுற்றுலா பயணிகளும் விடுதிகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டது.

சேலத்தில் இடி மின்னல், சூறைக் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி, ஜலகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.
அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மலை கிராமங்களில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. செய்யூர், இரும்பேடு, கண்ணமங்கலம், சந்தவாசல் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஈஸ்வரன் கோயில் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சாலையில் தேங்கிய தண்ணீரில் மிதந்தன.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பொழிந்தது. காலையில் வெயில் வாட்டிய நிலையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications