கனமழையால் தமிழகத்தில் 9 பேர் உயிரிழப்பு! 4,597 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு! தமிழக அரசு தகவல்
சென்னை: கனமழையால் தமிழகம் முழுவதும் இதுவரை சுவர் இடிந்து/இடி மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழகம் முழுவதும் இதுவரை 4,597 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மழை விவரம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

மழை விபரம்
*தென்மேற்கு பருவமழைக் காலத்தில், 01-06-2022 முதல் 31-08-2022 முடிய 392.1 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 87 விழுக்காடு கூடுதல் ஆகும்.
*02.09.2022 - கனமழை - நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி. மேலும், தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
*03.09.2022 மற்றும் 04.09.2022 - கனமழை - நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை. மேலும் தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணை
மேட்டூர் அணையின் நீர்மட்டம், அணையின் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால், இன்று (01-09-2022) காலை 11.30 மணி அளவில் மேட்டூர் அணையிலிருந்து 55,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கொள்ளிடம் ஆற்றில் அதிகபடியான கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் பவானி அணையிலிருந்து 9,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

நிவாரண நடவடிக்கை
முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தொடர்புடைய கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 02.09.2022 அன்று குமரி பகுதிகளில் 40 முதல் 50 மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை செய்தி, மீன்வளத் துறை மூலமாக மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை குறுஞ்செய்தி
மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணையிலிருந்து தொடர்ந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை (CAP - Common Alert Protocol) மூலம் 17.69 இலட்சம் செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.

தயார் நிலையில் குழு
முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி மீட்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிருவாகத்துடன் இணைந்து செயல்படும் வகையில், ஈரோடு, நாமக்கல் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு, மாவட்டம் ஒன்றுக்கு ஒரு குழு வீதம், 75 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்களும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 80 வீரர்களைக் கொண்ட ஒரு குழுவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

94458 69848
பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண்.94458 69848 மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.












Click it and Unblock the Notifications