வெயில் வாட்டி வதைத்த இடங்களிலும் வெளுத்துக்கட்டிய கனமழை.. சூடு தணிந்து, சாலையில் வெள்ளம்! ஆஹா!
சென்னை: சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே அனல் கொளுத்திய ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழையால் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தென்காசி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்தது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26- 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
அதன்படி, இன்று மாலை முதல் சென்னை நகரின் பல பகுதிகளில் மேகங்கள் திரண்டு, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அசோக் நகர், வடபழனி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, சேப்பாக்கம், எழும்பூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

சென்னை புறநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இன்று மாலை திடீர் கருமேகம் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. தாம்பரம், வண்டலூர், குன்றத்தூர், திருமுல்லைவாயில் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், பூந்தமல்லி உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ஆவடி சுற்றுவட்டார பகுதி ஆவடி புதிய ராணுவ சாலை, கோவில் பதாகை மற்றும் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது. மழை வெளுத்து வாங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கரூர், மதுரை, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் இன்று இரவு நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில், நேற்று இரவு மழை பெய்தது. இன்றும் கோவில்பட்டி, இனாம் மணியாச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர்பெருக்கெடுத்தது. பலத்த மழை காரணமாக இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
இதேபோல, ராமநாதபுரம் மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் ஒருசில பகுதியில் தூரலாக சாரல் மழை பெய்து வந்தது. நேற்று அதிகாலையில் கனமழை பெய்யத் தொடங்கி 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இன்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. தொடர் மழையால் பல இடங்களில் சாலைகளில் மழைர் தேங்கியது.












Click it and Unblock the Notifications