தமிழகத்தில் ஒரு பக்கம் இடி மின்னலோடு மழை... இன்னொரு பக்கம் வெயில் சுட்டெரிக்கும்
மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று முதல் மே 3ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தென்தமிழகம் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, கரூர், சேலம், நாமக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரைக்கும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும்.
தமிழக உள் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். கடலோர மாவட்டங்களில் இயல்பை விட அதிகம் வியர்க்கும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
மாலை முதல் காலை வரை அதிகம் வெக்கையாகவும் புழுக்கமாகவும் காணப்படும். இயல்புக்கு மாறாக அதிகம் வியர்க்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf