சென்னையின் நுழைவு வாயிலே திணறிப் போச்சு.. விடுமுறை முடிந்து படையெடுத்த மக்களால் கடும் நெரிசல்!
சென்னை: விடுமுறை முடிந்து சென்னை நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்ததால், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து வருகின்றன.
ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறை நாட்களை கொண்டாடிவிட்டு சென்னை நோக்கி பொதுமக்கள் வரத் தொடங்கியதால் தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் சனிக்கிழமை விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பலரும் சென்றனர். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் தங்களது குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பேருந்துகள் ஆம்னி சேவைகளை மேம்படுத்தி, கூடுதல் பேருந்துகளை இயக்கின. இந்நிலையில், விடுமுறை முடிந்து திங்கட்கிழமை அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை தங்கள் ஊர்களில் இருந்து கிளம்பினர்.
இதன் காரணமாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, சுங்கச்சாவடிகள் இருக்கும் பகுதிகளில் சில கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, மதுராந்தகம் ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் நுழைவு வாயில் என கருதப்படும் பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை நகருக்குள் செல்ல ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசலால், மக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications