சிபிஐ முடக்கிய பேங்க் அக்கவுண்ட்ல இருந்த என் பணத்தை காணோம்! மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை பரபர புகார்
சென்னை: சிபிஐ அதிகாரிகள் முடக்கி வைத்த வங்கி கணக்கில் இருந்து 23 லட்ச ரூபாயை காணவில்லை என மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மூலிகை பெட்ரோல் என்றதுமே நினைவுக்கு வருவது ராமர் பிள்ளை. 1999ஆம் ஆண்டு மூலிகை பெட்ரோல் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக மோசடி வழக்கை பதிவு செய்தது சிபிஐ. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், 2016ஆம் ஆண்டு ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து, வழக்கில் இருந்து விடுதலை ஆனார் ராமர் பிள்ளை.

சென்னை தி.நகரில் வசித்து வரும் ராமர் பிள்ளை, அவ்வப்போது மூலிகை பெட்ரோல் பற்றி பேசி பரபரப்பைக் கிளப்புவது வாடிக்கை. இந்நிலையில் ராமர்பிள்ளை இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். சிபிஐயால் முடக்கப்பட்ட தனது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார் ராமர் பிள்ளை.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமர் பிள்ளை, "நான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோலில் குற்றம் உள்ளது என்றும், மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்பை வைத்து நான் மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ என் மீது வழக்கு பதிவு செய்திருந்தது. நான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் மீதும் குற்றம் உள்ளதாக கூறி எனது வங்கி கணக்கையும் சிபிஐ முடக்கி வைத்தது.
23 வருட சட்டப் போராட்டத்திற்கு பிறகு என் மீதும், என் மூலிகை பெட்ரோல் மீதும் தவறு இல்லை என முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் முடக்கி வைத்த வங்கி கணக்குக்கு 23 வருட வட்டியுடன் திரும்ப தன்னிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை சென்னை தி.நகரில் உள்ள சம்மந்தப்பட்ட யூகோ கிளையில் சமர்ப்பித்து என்னுடைய பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன். அதற்கு வங்கி மேலாளர், "உங்கள் பணம் எங்கு போனதென்று தெரியவில்லை" என்று கூறி ஒரு வருடகாலமாக என் பணம் ரூ. 23 லட்சத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
நீதிமன்ற உத்தரவை வங்கி செயல்படுத்தவில்லை. ஆறு மாதம் அவகாசம் கேட்ட அதிகாரிகள் ஒரு வருடமாகியும் என் பணத்தை திருப்பி தரவில்லை. ரிசர்வ் பேங்க் வரை கேட்டும் உங்கள் பணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என பேங்க் மேனேஜர் கண்ணீர் விடுகிறார்.
என் மொத்த பணமும் 2006ஆம் ஆண்டு எங்கேயோ டிரான்ஸ்பர் ஆகிவிட்டது. எனவே என் பணத்தை கையாடல் செய்த சம்மந்தப்பட்ட வங்கி மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டு தருமாறு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன்.
காவல்துறை தலையிட்டு என்னுடைய பணத்தை பெற்றுத்தர வேண்டும். சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன். மேலும் சிபிஐ அதிகாரிகளால் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து எவ்வாறு பணம் காணாமல் போகும்? நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வரும் வங்கி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications