கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவோம்.. ஆரோக்கியமானவர்கள் அதிகரிச்சா.. கொரோனா ஒழியும்.. தமிழக அதிகாரி!
சென்னை: கொரோனா பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவோம். ஆரோக்கியமானவர்கள் அதிகரித்தால் நிச்சயம் கொரோனா ஒழியும் என தமிழக பொது சுகாதாரத் துறையின் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக பொது சுகாதாரத் துறையின் இயக்குநராக 7ஆண்டுகள் இருந்தவர் குழந்தைசாமி. இவரது பணிக்காலத்தில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் உச்சத்தில் இருந்தன. கஜா புயல் உள்ளிட்ட இயற்கை இடர்களும் ஏற்பட்டுள்ளன.
இவர் அண்மையில் அப்பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். இவரை தி நியூஸ் மினிட் செய்தி நிறுவனம் பேட்டி எடுத்தது. அப்போது அவரிடம் கொரோனா குறித்த கேள்விகளும் ஹெர்ட் இம்யூனிட்டி குறித்தும் அவர் பேசியுள்ளார்.

உதவி
அவர் கூறுகையில் எனது பணிக்காலத்தில் நான் சந்தித்த நெருக்கடிகளில் கொரோனாதான் முக்கியமானது. புயல்கள், வெள்ளம் ஏற்பட்டால் அண்டை மாநிலத்திடம் இருந்தோ ஏன் வேறு நாட்டிலிருந்தோ உதவியை பெற்று கொள்ளலாம். ஆனால் இப்போதைய சூழலில் யாருடைய உதவியையும் நாம் எதிர்பார்க்க முடியாது. நம்மிடம் உள்ள வளங்களை வைத்தே நாம் சமாளித்தாக வேண்டும்.

அதிக நேரம்
பொது சுகாதாரத் துறையை மொத்தமாக நாம் வலுப்படுத்த வேண்டியது அவசியம். அரசிடம் இருந்து உதவிகள் தேவைப்படுகிறது. எந்தவித பிரச்சினையும் இல்லாத போது ஒன்றும் தெரியாது. ஒரு நெருக்கடி என வந்துவிட்டால் நாம் வெளியே தெரிவோம். எந்த நாடாக இருந்தாலும் அது வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தொற்றுநோய் இல்லாத நிலை இருக்க வேண்டும். சுகாதாரத் துறை ஏற்கெனவே அதிக நேரம் பணியாற்றி வருகிறார்கள்.

ஆகஸ்ட் மாதம்
நம்மிடம் வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆனால் அதை மேலும் வலுப்படுத்த வேண்டும். காலவரையற்ற லாக்டவுன் தேவையில்லை. ஆரோக்கியமாக இருப்பவர்கள் வெளியே போகலாம். குரோனிக் நோய் இல்லாதவர்கள் வெளியே செல்லலாம். தொழிற்சாலைகள் இயங்கலாம். கல்லூரிகள் வரும் ஜூலை மாதம் முதல் இயங்கலாம். 9,10, 11, 12 வகுப்புகள் ஆகஸ்ட் மாதத்திலும், 6,7,8 வகுப்புகள் செப்டம்பரிலும் தொடங்கலாம்.

தொற்று நோய்
ஆரம்ப கல்வி அக்டோபரில் தொடங்கலாம். இந்த ஆண்டு முழுவதும் கிண்டர் கார்டன் தொடங்கவே கூடாது. இந்த ஓராண்டில் ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் மந்தை எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒரே ஆண்டில் 60 சதவீதம் ஹெர்ட் இம்யூனிட்டி அதிகரித்தால் வைரஸ் பரவல் தடுக்கப்படும். கோயம்பேடு சந்தையில் போதிய நடவடிக்கைகளை எடுத்தோம். இது தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையே நடந்த போராட்டம். கேரளாவிலும் நோய் கட்டுக்குள் இருப்பதற்கு காரணம் ஹெர்ட் இம்யூனிட்டிதான்.

60 வயது
கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு நோய் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டும். நகரங்களில் நெருக்கடி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைகளை குழந்தைசாமி வழங்கினார்.












Click it and Unblock the Notifications