Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாட்சியம் சொன்ன எடப்பாடி பழனிசாமி.. விரைவில் ஐகோர்ட்டில் தாக்கல்! ஜன.12 விசாரணைக்கு வருகிறது வழக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கில், உயர் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் ஆணையர் கார்த்திகைபாலன் எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியம் பதிவு செய்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரலில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கோடநாடு எஸ்டேட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் எனக் கூறப்படும் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

High Court-appointed lawyer Karthikaibalan recorded evidence of Edappadi Palanisamy

இதற்கிடையே கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஜாமீனில் வெளியே வந்து அளித்த பேட்டியில், "எனது சகோதரர் கனகராஜ் என்னை சந்தித்தபோது 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில்தான் 5 பைகளை எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதனால் எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரிக்க வேண்டும்" என்றார். தனபாலின் இந்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதின்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டு, இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார். ஒரு மாதத்திற்குள் சாட்சிகளை பதிவு செய்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, அதனை அறிக்கையாக ஜனவரி 12ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.

இந்நிலையில், உயர் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகைபாலன் இன்று எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் சாட்சியம் பதிவு செய்தார். எடப்பாடி பழனிசாமி சாட்சியம் தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து, ஜனவரி 12ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+