2 சீட் போட்டி.. விஜய்க்கு குட் நியூஸ்.. தேர்தல் செலவை திருப்பி வழங்க கோரிய வழக்கில் ஐகோர்ட் அதிரடி!
சென்னை: தேர்தல்களில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்கள், ஒரு தொகுதியை ராஜினாமா செய்வதால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் தேர்தல் செலவை அவர்களே ஏற்க உத்தரவாதம் பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஒரு நபர் 2 தொகுதிகளில் போட்டியிட தற்போதைய தேர்தல் சட்டம் அனுமதி வழங்குகிறது என்று நீதிபதிகள் எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு சுட்டிக்காட்டி, இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மதுரை மேலூரைச் சேர்ந்த மணி என்பவர் தாக்கல் செய்த மனுவில், சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் சில வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அவர்கள் இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
அதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே, இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம், ராஜினாமா செய்யும் தொகுதியின் தேர்தல் செலவுகளை ஏற்க வேண்டும் என உத்தரவாத பத்திரம் பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் போட்டியிட சட்டம் அனுமதியளிக்கிறது. இந்த சட்டப்பிரிவை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்றமே தள்ளுபடி செய்துள்ளது என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது தேர்தல் சட்டப்படி (Section 33(7) of RP Act) அனுமதிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக, அரசியல் தலைவர்கள் 2 தொகுதிகளில் போட்டியிடுவார்கள். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில், அதில் ஒரு தொகுதியை வைத்துக்கொண்டு மற்றொரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.
நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள், ஒரே தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி 2014 மக்களவைத் தேர்தல்களில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். 2014-ல் வாரணாசி மற்றும் வதோதரா தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர் ஒன்றை ராஜினாமா செய்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 1991 சட்டமன்றத் தேர்தலில், பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், சட்ட விதிகளின்படி காங்கேயம் தொகுதியை ராஜினாமா செய்தார்.
தவெக தலைவர் விஜய், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவது விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் தான், 2 தொகுதிகளில் போட்டியிடுவோருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications