களம் எட்டுல.. சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி.. ஆனா சில நிபந்தனைகள்!
சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் தங்கனூரில் சேவல் சண்டைப் போட்டிகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தைப்பூச திருவிழாவையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், தங்கனூரில் வரும் ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் சேவல் சண்டைப் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி தேவாரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் தங்கனூரில் சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது என உத்தரவிட்டார். எனினும், சேவல் சண்டையின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் போட்டிகளை உடனே நிறுத்த வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், சேவல் சண்டை போட்டியின் போது, சேவல்களுக்கு மது வழங்கவோ, காலில் கத்தி கட்டவோ கூடாது, சாதிய ரீதியிலான தலைவர்களை புகழ்ந்து பாடல்களை ஒலிபரப்பக் கூடாது, பேனர்கள் வைக்கக்கூடாது என்ற நிபந்தனைகளையும் விதித்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி, தங்கனூரில் சேவல் சண்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications