வனத்தை சிதைக்க அனுமதிக்க முடியாது- 'சதுரகிரி மலை' வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சதுரகிரி மலை செல்லும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரிய வழக்கில் வனத்தை சிதைக்க அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில் மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் புகழ் பெற்றது. அமாவாசை, பவுர்ணமி மற்றும் விழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துகிறார்கள். இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அடிப்படை தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தீயணைப்பு மீட்பு குழு, அவசரகால மருத்துவ வசதி, சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இருந்தார்.
இந்த மனுவினை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இன்றைய விசாரணையில், குடிநீர் என்பது பக்தர்களுக்கும் வன உயிரினங்களுக்கும் இன்றியமையாதது என நீதிபதிகள் கூறினர். மேலும் மனுதாரர் கூறுவது போல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் பக்தர்களை அனுமதித்தால், அது வனத்தை சிதைக்க வழிவகுக்கும் என்றனர்.
இதை அனுமதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், சதுரகிரியில் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு குடிநீர் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வனத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications