அதிகாரம் மிக்க நபர்கள் பேசினர்.. சவுக்கு சங்கர் வழக்கை அவசரமாக விசாரித்தது ஏன்? நீதிபதி விளக்கம்!
சென்னை: சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பாக அதிகாரம் மிக்க நபர்களிடம் இருந்து அழுத்தம் வந்ததாக உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். வழக்கமான நடைமுறைப்படி சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். அவசரமாக இறுதி விசாரணைக்கு எடுத்தது ஏன் என்றும் நீதிபதி சுவாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

சவுக்கு சங்கர் பேட்டி: யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 12ஆம் தேதி குண்டர் சட்டத்தை சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்தார்.
சவுக்கு சங்கரின் தாயார் மனு: இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு உடனடியாக எடுத்துக்கொண்டார் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன். சவுக்கு சங்கர் தாயாரின் ஆட்கொணர்வு மனுவை அவசரமாக இறுதி விசாரணைக்கு எடுத்ததற்கு அரசு தலைமை வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார்.
இந்த ஆட்கொணர்வு மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2:15 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடபட்டது. அதைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என்ற உத்தரவாத மனுவை தாக்கல் செய்யும்படி சவுக்கு சங்கர் தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இன்று விசாரணை: இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கர் தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இதுவரை நடந்து கொண்ட செயல்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
சவுக்கு சங்கரின் தாய் தரப்பில், சவுக்கு சங்கர் கருத்தால் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. பொது சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் முன் நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகள், குண்டர் சட்ட உத்தரவில் குறிப்பிடவில்லை என வாதிடப்பட்டது.
இடையீட்டு மனுக்கள்: தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அனைத்து நடைமுறையும் பின்பற்றி தான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்த்துக் கொள்ள கூறி, பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் முறையீடு செய்து இருந்தனர்.
மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள்: இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில், பிளாக்மெயிலரான சவுக்கு சங்கரால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய மனுவை ஏற்றுக் கொள்ள வேண்டும், தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதால், அவர் தண்டிக்கப்பட வேண்டிய நபர் என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உத்தரவு பிற்பகலில் பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து, பிற்பகலில் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
அதிகாரம் மிக்க நபர்கள் பேசினார்கள்: நீதிபதி சுவாமிநாதன், அதிகாரம் மிக்க நபர்கள் இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் பேசியதாகவும், வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டால், அந்த நபர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்து விடுவார்கள் என்பதால், அவசரமாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவில், சவுக்கு சங்கருக்கு எதிரான போதைப்பொருள் வழக்கை குறிப்பிடவில்லை எனவும், பொது அமைதி பாதிக்கப்படவில்லை, கைது செய்யப்பட்ட எந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்படாததால், உடனடியாக விடுதலை செய்யப்பட வாய்ப்பில்லை, காவல்துறை மனதை செலுத்தாமல் குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கப் பட்டுள்ளதாகக் கூறி, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
மற்றொரு நீதிபதி உத்தரவு: நீதிபதி பாலாஜி, வழக்கமான நடைமுறைப்படி இந்த வழக்கில் சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும். பதிலுக்கு பிறகே இந்த ஆட்கொணர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
இரு நீதிபதிகளும் இரு வேறு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளதால் இந்த வாழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு நீதிபதிகள் பரிதுரை செய்தனர். அதேசமயம், கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கரை புழல் சிறைக்கு மாற்ற இரு நீதிபதிகளும் ஒருமித்த உத்தரவை பிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications