'தமிழக அரசை நம்புகிறோம்.. ஆன்லைன் ரம்மி தடைக்கு 6 மாதங்களில் புதிய சட்டம்..' ஹைகோர்ட் கருத்து
சென்னை: பலர் இளைஞர்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக உள்ள ஆன்லைன் ரம்மி தளங்களைத் தடை செய்யும் வகையில் புதிய சட்டத்தை ஆறு மாதத்திற்குள் தமிழ்நாடு அரசு அரசு கொண்டு வரும் என்றும் நம்புவதாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்,
மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் தான், தமிழ்நாடு அரசு புதிய சட்டத்தை இன்னும் 6 மாதங்களில் கொண்டு வரும் என நம்புவதாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது

பொதுநல வழக்கு
இது தொடர்பாக முத்துக்குமார் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில், "கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் ஆன்லைன் ரம்மி விளையாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இதனால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

நீதிபதிகள் கருத்து
ஏற்கனவே இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "இந்த வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு விரைவாகச் செயல்பட்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடை விதித்தது.

பலர் உயிரிழந்துள்ளனர்
இதற்கு எதிராக ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த முறையீட்டு வழக்கில், தமிழ்நாடு அரசு விதித்த தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சமீபத்தில் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். இது போன்ற தளங்களால் பலர் உயிரிழந்துள்ளனர்.

நம்புகிறோம்
எனவே, தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம். ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆறு மாதங்களில் தமிழ்நாடு அரசு புதியதொரு சட்டத்தை இயற்றும் என நம்புகிறோம்" என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications