சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு.. அதிகாரிகளிடம் வசூலித்து கொடுங்கள்.. ஐகோர்ட் உத்தரவு
Recommended Video
சென்னை: பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு அரசு நிவாரணமாக ரூ.5லட்சம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தொகையை அதிகாரிகளிடம் இருந்து பெற்று தர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சட்டவிரோத பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ பலியான சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் லட்சுமி நாராயணன், கண்ணதாசன் ஆகியோர் முறையிட்டனர்.
இதையடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சியினருக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. உயிர்பலி கொடுத்தால் தான் அரசு நிர்வாகம் செயல்படுமா? சுபஸ்ரீ விவகாரத்தில் விதிமீறி பேனர் வைக்க அனுமதித்தோர் மீது எடுத்த நடவடிக்கை என்ன. என கேள்வி எழுப்பியது.
தொடர்ந்து பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5லட்சம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தொகையை பின்னர் அதிகாரிகளிடம் இருந்து வசூலித்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் சட்டவிரோத பேனரை தடுக்கத் தவறிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
பணியில் கவனக்குறைவு போன்றவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு ஆணை பிறப்பித்தனர். அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அறிக்கை தேவை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். விதிமீறலில் ஈடுபட்டவர்கள், விதிமீறலை தடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவுமுறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தலைமைச்செயலாளர் கண்காணிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுபஸ்ரீ வழக்கின் விசாரணை குறித்து பரங்கிமலை போலீசார்,மாநகராட்சி தாக்கல்அறிக்கை செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.