ஆணவ கொலைகளை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன - அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் ஆணை
தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடுக்க அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆணவ கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி அடங்கிய சிறப்பு பிரிவை துவங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தனிப்பிரிவை துவங்க உத்தரவிடக் கோரி துளிர் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் வித்யாரெட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியிருந்தால் தமிழகம் ஆணவ கொலைகள் இல்லா மாநிலமாக மாறியிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு புதுக்கோட்டையைச் சேர்ந்த காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி, கோவை செல்லும் வழியில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதன் பின் அப்பெண் மர்மமான முறையில் மரணமடைந்ததாகவும், இது ஆணவ கொலையாக இருக்கலாம் எனவும் மனுவில் சந்தேகம் எழுப்பியுள்ளார். அதனால் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications