கிருஷ்ணகிரி மாங்கனி திருவிழா.. பாமக வைத்த முக்கியமான கோரிக்கை.. ஹைகோர்ட் நிராகரிப்பு
சென்னை: கிருஷ்ணகிரியில் நடைபெறும் அகில இந்திய அளவிலான மாங்கனி திருவிழாவை வேறு இடத்திற்கு மாற்றக்கோரிய பாமகவின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பா.ம.க வின் மத்திய மாவட்ட செயலாளர் இளங்கோ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அகில இந்திய அளவில் மாங்கனி திருவிழா, கிருஷ்ணகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அளவில் சிறப்பு பெற்ற இத்திருவிழாவில் கடந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாகவும்,
திருவிழா நடைபெறும் அப்பள்ளியானது மாவட்டத்தின் பிரதான இடத்தில் இருப்பதாகவும், அதற்கு செல்லும் பாதை 12அடியில் குறுகலாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே அருகில் இருக்கும் தனியார் நிலத்தில் பாதைக்காக கூடுதல் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அந்த இடத்தில் கட்டிடங்கள் வந்ததால், அவ்விடத்தில் திருவிழா நடத்தினால் போக்குவரத்து நெரிசல், வாகன நிறுத்துமிடம் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.ஆகவே மாங்கனி திருவிழாவை வேறு இடத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், அரசு சார்பில் ஆஜரான பி.முத்துக்குமார், கடந்த 28ஆண்டுகளாக வெற்றிகரமாக மாம்பழ திருவிழா நடத்தப்பட்டுள்ளதாகவும்,இந்த ஆண்டு நாளை முதல் 30ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இத்திருவிழாவில் பலவகையான மாம்பழங்கல் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, போக்குவரத்து காவல்துறை உதவியுடன் சிறப்பான ஏற்பாடுகளாக திருவிழாவிற்கு வரும் வழி, வெளியில் செல்லும் வழி, கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் பொதுமக்களை பாதிக்காத வகையில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பாமக சார்பில் தொடர்ந்த கோரிக்கையை நிராகரித்தும், மனுவை முடித்து வைத்தும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications